ரஷ்ய பெண்களுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்தது - மன்னிப்பு கேட்ட பில்கேட்ஸ்!
- Muthu Kumar
- 26 Feb, 2026
பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனின் ஃபைல்கள் தொடர்ந்து, அமெரிக்க நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டு வருகிறது.இந்த ஃபைல்களில் சர்வதேச அளவில் பல பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள் பெயர்கள் அடிபட்டி வருகின்றன. மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் சிக்கினார். இப்படி இருக்கையில், இந்த விவகாரம் குறித்து தனது ஊழியர்களிடம் பில்கேட்ஸ் மன்னிப்பு கோரியிருக்கிறார்.
பில்கேட்ஸ் மன்னிப்பு கேட்டது குறித்து 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டிருக்கிறது. அதில், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஊழியர் சந்திப்பின்போது பில்கேட்ஸ் மன்னிப்பு கேட்டதாக கூறப்பட்டிருக்கிறது.
சிறுமிகளை கடத்தி, உலக பணக்காரர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் விற்று பாலியல் தொழிலை நடத்தி வந்தவர்தான் எப்ஸ்டீன். அவர் இப்போது உயிருடன் இல்லை. இருப்பினும் அமெரிக்க நாடாளுமன்றத்தில், இவர் தொடர்பான அனைத்து ஃபைல்களும் மக்கள் பார்வைக்கு பொது வெளியில் வைக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து அமெரிக்க நீதித்துறையானது எப்ஸ்டீனின் ஃபைல்களை வெளியிட்டு வருகிறது.
இந்த ஃபைல்களில்தான் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் சிக்கியிருக்கின்றன. அதில் பில்கேட்ஸும் ஒருவர். அவருக்கு ரஷ்ய பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், இதனால் பாலியல் நோயால் பாதிக்கப்பட்டதாகவும், அது தனது மனைவிக்கு தெரியாமல் குணப்படுத்த முடியுமா? என்றும் எப்ஸ்டீனிடம் இவர் கேட்டிருந்ததாக ஃபைல்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்திருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்துதான் தற்போது பில் கேட்ஸ் விளக்கமளித்துள்ளார்.
தனது ஊழியர்களிடம் பேசிய அவர், தனக்கும் ரஷ்ய பெண்கள் இருவருக்கும் இடையில் திருமணத்தை மீறிய உறவு இருந்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். பிரிட்ஜ் விளையாட்டில் சந்தித்த ரஷ்ய வீராங்கனையுடனும், வணிகச் செயல்பாடுகள் மூலம் சந்தித்த ரஷ்ய அணுக்கரு இயற்பியலாளருடனும் தனக்கு உறவு இருந்ததை பில்கேட்ஸ் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
மேலும், "எப்ஸ்டீனுடன் நேரம் செலவழித்தது ஒரு பெரிய தவறு. நான் செய்த தவறால் இதில் சிக்கிய மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எப்ஸ்டீன் கோப்புகளில், முகங்கள் மறைக்கப்பட்ட பெண்களுடன் நான் இருக்கும் புகைப்படங்களும் இருந்தன. தனது உதவியாளர்களுடன் அப்படங்களை எடுக்க எப்ஸ்டீன் கேட்டதால்தான் எடுத்துக்கொண்டேன். நான் ஒருபோதும் பாதிக்கப்பட்ட பெண்களுடனோ அல்லது அவரைச் சுற்றியுள்ள பெண்களுடனோ நேரம் செலவழித்ததில்லை.
எப்ஸ்டீனுடனான உறவு, அறக்கட்டளையின் மதிப்புகளுக்கும், இலக்குகளுக்கும் முற்றிலும் எதிரானது. எங்கள் பணி நற்பெயர் சர்ந்தது, உணர்திறன் கொண்டது. மக்கள் எங்களுடன் பணிபுரிய அல்லது பணிபுரியாமல் இருக்கத் தேர்வு செய்யலாம்" என்று கூறியிருக்கிறார்.
பில்கேட்ஸ் கடந்த 2011ல் எப்ஸ்டீனைச் சந்திக்கத் தொடங்கினார். ஆனால், எப்ஸ்டீன் 2008லேயே சிறுமிகளை விபசாரத்திற்குத் தூண்டியதாக சிறை தண்டனை பெற்றிருந்தார். இது குறித்து விளக்கமளித்த பில்கேட்ஸ், எப்ஸ்டீனின் பின்னணியை முறையாகச் சரிபார்க்கவில்லை என்றும், அவரது 18 மாத கால சிறை தண்டனை மற்றும் பயணக் கட்டுப்பாடுகளைப் பற்றி ஓரளவே தெரியும் என்றும் தெரிவித்தார். முழுமையான விவரங்கள் தனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



