நடந்த கதையை திரைப்படமாக தயாரிப்பீர்- ஃபாமியின் பேச்சினால் மக்களவையில் சிரிப்பொலி!
- Muthu Kumar
- 04 Nov, 2025
கோலாலம்பூர், நவ. 4-
ஒவ்வொரு முறையும் மக்களவை கூடும்போது காரசாரமான விவாதங்கள் ஏற்படுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக திட்டிக் கொள்வார்கள். “நீ ஒரு அறிவிலி, நீ ஒரு அது. மன்னிப்புக் கேள், இருக்கையில் உட்காருங்கள். கேள்வி கேட்க இது உங்கள் நேரமல்ல, வெளியே போங்கள் என்றெல்லாம் பேசப்படும்.
கடந்த வாரத்தில்கூட பல முறை பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் கூச்சலும் சலசலப்பும் ஏற்பட்டது. இவற்றுக்கு மத்தியில் நேற்றைய மக்களவைக் கூட்டத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பைக் காண முடிந்தது.
"உங்களுக்கு நேர்ந்த சம்பவத்திற்காக நான் அனுதாபப்படுகிறேன். பெர்சத்து கட்சியிலிருந்து நீங்கள் நீக்கப்பட்டுள்ள சம்பவத்தை திரைப்படமாக தயாரியுங்கள்" என்று, தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜன்னுக்கு, தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் பரிந்துரை செய்தபோது மக்களவை சற்று கலகலப்பில் மூழ்கியது.
அண்மையில் வான் சைஃபுலுக்கு நேர்ந்த சம்பவத்திற்காக தாம் அவருக்கு தமது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாக ஃபாமி கூறினார்."முதலில் எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மிகப் பெரிய சம்பவத்தை எதிர்கொள்வதில் அமைதி காக்குமாறு தாசேக் குளுகோரை (வான் சைஃபுல்) கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் ஒரு நல்ல மனிதர். உங்களுக்கு அவ்வாறு நடந்திருக்கக் கூடாது.
“உங்களால் நீதியை நிலைநாட்ட முடியும் என்று நான் நம்புகிறேன்" என்று. மக்களவையில் நேற்று வான் சைஃபுல் எழுப்பிய ஒரு கூடுதல் கேள்விக்கு பதிலளிக்கும்போது, 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைப்பதற்காக உரையாற்றுவதற்கு முன்னர் ஃபாமி தெரிவித்தார். ஃபாமி சொன்னதைக் கேட்டு புன்முறுவலிட்ட வான் சைஃபுல், “நான் நன்றி கூறுகிறேன். இந்த விசயத்தில் இண்ட்ரா மக்கோத்தாவும் (சைஃபுடின் அப்துல்லா) அப்படித்தான்" என்றார்.
வான் சைஃபுல் சொன்னதைக் கேட்ட ஃபாமி, இவர்களின் கட்சியில் நடக்கும் விவகாரங்களில் இவர்கள் இருவரும் "பாதிக்கப்படவர்கள்" என்று சாதாரணமாக பதிலளித்தார்."மற்றொருவர் பாதிக்கப்பட்டிருக்கின்றார். அவர்களை நான் மதிக்கின்றேன்.(உங்கள் கதையை) நீங்கள் ஏன் திரைப்படமாக தயாரிக்கக் கூடாது? என்று ஃபாமி கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பொலி எழுந்தது.
ஒழுங்கு நடத்தை காரணமாக, கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி பெர்சத்து கட்சியிலிருந்து வான் சைஃபுல் நீக்கப்பட்டார். அக்கட்சியைச் சேர்ந்த மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அஹ்மாட் ஃபைசால், ஒரு தவணைக்கு கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். முன்னாள் வெளியுறவு அமைச்சரும் பெர்சத்து உச்சமன்ற உறுப்பினருமான சைஃபுடின் வரும் வியாழக்கிழமை, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு முன் ஆஜராக வேண்டும் என்று அக்கட்சி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
முஹிடின் “தமது தலைமைத்துவ தரத்தை இழந்து விட்டார்" மற்றும் ஒரு காலத்தில் போற்றப்பட்ட அதே தலைவர்போல் இப்போது அவர் இல்லை என்று. பெரித்தா ஹரியானிடம் கூறிய சைஃபுடின், பெர்சத்து தலைவர் பதவியிலிருந்து முஹிடின் விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
கட்சிக் கூட்டங்களை நடத்தவும் முஹிடின் தவறி விட்டார் என்றும் குற்றஞ்சாட்டிய சைஃபுடின். கட்சியின் தலைமைச் செயலாளர் அஸ்மின் அலியும் தகவல் பிரிவுத் தலைவர் துன் ஃபைசால் இஸ்மாயிலும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



