இந்து ஆலயங்களுக்கு RM20,000 “ஒன்-ஆஃப்" (one-off) நிதி உதவி வழங்கப்பட வேண்டும்- மலேசியா இந்து சங்கம்!
- Muthu Kumar
- 30 Sep, 2025
இந்து ஆலயங்களுக்கு RM20,000 “ஒன்-ஆஃப்" (one-off) நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை மேற்கோள் காட்டி, மலேசியா இந்து சங்கம் இந்த அறிக்கையை வெளியிடுகிறது.
அந்த பரிந்துரை, தர்மா மடானி திட்டத்தின் அமலாக்கத்தை கவனிக்கும் தேசிய ஒற்றுமை அமைச்சகத்தின் (KPN) கீழ் செயல்படும் திட்டக்குழுவில் விவாதிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது என்பதை மலேசியா இந்து சங்கம் இத்துடன் தெளிவுபடுத்துகிறது. திட்டக்குழுவின் நிலைப்பாடு உறுதியானது, இத்தகைய “ஒன்-ஆஃப்” உதவி, தர்மா மடானி திட்டத்தின் அசல் நோக்கத்துக்கு ஏற்புடையதல்ல.
தர்மா மடானி திட்டம் என்பது மலேசியா இந்து சங்கம் மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சகம் இணைந்து நடத்திய தேசிய ஆலய மாநாடுவின் விளைவாக உருவானது. அந்த மாநாட்டில், இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் முன்வைக்கப்பட்டதோடு, அவற்றைச் சமாளிப்பதில் ஆலயங்களின் பங்கு பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மாநாட்டில், ஆலயங்கள் வெறும் வழிபாட்டு தலங்களாக மட்டுமல்லாது, சமூக சேவை மையங்களாகவும் இயங்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, அரசின் முக்கிய முயற்சிகள் மற்றும் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தளமாகவும் ஆலயங்கள் பங்காற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது. இந்த அணுகுமுறை, அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட மடானி அரசு திட்டத்துடன் ஒத்துப்போகிறது.
ஒரு மத அமைப்பால் முன்வைக்கப்பட்ட தொலைநோக்கு முயற்சியை அரசு ஏற்று, அதை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பது இதுவே முதல் முறை. இது, சமூகத்தின் குரலுக்கு அரசு செவிசாய்த்ததையும், மத அமைப்புகளின் பங்களிப்பை மதிப்பதையும் தெளிவுபடுத்துகிறது.தேசிய ஆலய மாநாட்டில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பின்னர் பரிசீலிக்கப்பட்டு 8 முக்கிய தீர்மானங்களாக சுருக்கப்பட்டு, இவ்வாண்டு மார்ச் மாதத்தில் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
அமைச்சரவை, இந்திய சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கத்தில், அவற்றை நிறைவேற்ற MITRA நிதியைப் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது.மொத்தம் 20 மில்லியன் நிதி 200 ஆலயங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பை பிரதமர் டத்தோ' ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வெளியிட்டார்.
எனவே, தர்மா மடானி திட்டம் என்பது தேசிய ஆலய மாநாட்டில் உருவான ஒரு முக்கிய முயற்சியாகும். அது தேசிய ஒற்றுமை அமைச்சகத்தால் அமைச்சரவை மட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது MiTRA நிதியின் மூலம் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் கட்டத்தை எட்டியுள்ளது. தர்மா மடானி திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் தேசிய ஒற்றுமை அமைச்சகத்தால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவங்களும் அங்கீகரிக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள ஆலயங்களுக்கு விநியோகிக்கத் தயாராக உள்ளன.
ஊடகங்களில் ஏற்பட்ட குழப்பத்தை தெளிவுபடுத்தவும், நாடு முழுவதும் உள்ள ஆலய நிர்வாகிகளுக்கு தர்மா மடானி திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும் என்பதைத் தெரிவிக்கவும் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.ஆகையால், இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கான சிறந்த, ஒழுங்கமைந்த மற்றும் நிலைத்த முயற்சியாக விளங்கும் தர்மா மடானி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த, ஆலயங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்பதை மலேசியா இந்து சங்கம் வலியுறுத்துகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



