ரஃபிஸி உட்பட 9 எம்.பி.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை-பிகேஆர் ஆராய்கிறது!
- Muthu Kumar
- 14 Jul, 2025
பெட்டாலிங் ஜெயா,14-
நீதித்துறை விவகாரம் குறித்து அரச விசாரணைக் குழுவொன்றை அமைக்க கோரிக்கை விடுத்துள்ள தனது ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி பல தரப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர். அதனைப் பிகேஆர் ஆராய்ந்து வருகிறது என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் ஃபூஸியா சாலே நேற்று தெரிவித்தார்.
பிகேஆர் கட்சியைச் சேர்ந்த அந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்யும்படி விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைளையும் தாங்கள் ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.இந்த விவகாரம் தொடர்பில் கட்சியின் இதர பல தொகுதிகளின் கருத்துகள் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறோம்.
அத்தொகுதிகள் தங்களின் கருத்துகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைபெறவுள்ள மத்திய தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளன என்று ஃபூஸியா குறிப்பிட்டார். தொகுதிகளின் கருத்துகள் அடங்கிய அறிக்கைகளைத் தலைமைச் செயலாளரின் அலுவலகம் ஆராய்ந்து மேல் நடவடிக்கை மேள்கொள்வது குறித்து தீர்மானிக்கும். அந்நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை கட்சியின் நன்னெறிக் கோட்பாடுகளை மீறியிருக்கிறதா என்பதையும் ஆராயும் என்றார் அவர்.
உயர்நிலை நீதிபதிகளை நியமிப்பதில் நிலவிவரும் காலதாமதம் அரசமைப்புச் சட்ட நெருக்கடிக்கு ஒப்பானதாகும் என்பதால் அதனை விசாரணை செய்வதற்கு அரச விசாரணைக் குழுவுவையும் (ஆர்சிஐ) நாடாளுமன்ற தேர்வுக் குழுவையும் அமைக்க வேண்டும் என்று பிகேஆரின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லியும் இதர எட்டு பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அண்மையில் வலியுறுத்தியிருந்தனர்.
சம்பந்தப்பட்ட அந்த ஒன்பது பேரையும் இடைநீக்கம் செய்யும்படி ஜொகூரைச் சேர்ந்த பத்தொன்பது பிகேஆர் தொகுதிகள் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்திருந்தன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



