பெர்சத்துவில் சேர்ந்தார் கிர் தோயோ!
- Muthu Kumar
- 07 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 7-
சிலாங்கூரின் முன்னாள் மந்திரி பெசார் கிர் தோயோ பெர்சத்து கட்சியில் அதிகாரப்பூர்வமாகச் சேர்ந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அம்னோவிலிருந்து விலகி 2018ஆம் ஆண்டில் பெர்சத்து கட்சியில் சேர்ந்த முன்னாள் மலாக்கா முதல்வர் அப்துல் ரஹிம் தம்பி சிக் தமது முகநூல் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
பங்சாரில் அண்மையில் நடைபெற்ற ஒரு மதிய உணவு உபசரிப்பு நிகழ்ச்சி பற்றி விவரித்தபோது இந்த விவகாரத்தை ரஹிம் தம்பி சிக் தெரிவித்தார். அந்நிகழ்ச்சியில் கிர் தோயோ. ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்றார்.
கட்சியின் தேர்தல் வியூகத்தை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளை வழங்கத் தாம் தயாராக இருப்பதாகவும் கிர் தோயோ உறுதியளித்துள்ளார் என்று மலாக்கா மாநில பெர்சத்து தலைவருமான ரஹிம் தம்பி சிக் கூறினார்.
மூன்று தவணைகளுக்கு சுங்கை பாஞ்சாங் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரான கிர் தோயோ, அதிகாரத் துஷ்பிரயோக குற்றத்திற்காக 2015ஆம் ஆண்டில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குப் பிறகு நன்னடத்தை ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற பதினைந்தாவது பொதுத்தேர்தலில் சுங்கை பெசார் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்குப் பதில் சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸை வேட்பாளராக தேசிய முன்னணி பரிந்துரைத்தது. ஆயினும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரிடம் ஜமால் தோல்வி கண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



