திமுகவுக்கு இனிமேதான் ஆப்பு - மொத்த ஊழல் லிஸ்ட் என்கிட்ட இருக்கு - வேல்முருகன்!
- Muthu Kumar
- 23 Mar, 2026
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த முறை 13 கட்சிகளுடன் களம் கண்ட திமுக, இந்த முறை 26 கட்சிகளைத் தனது கூட்டணியில் இணைத்துள்ளதால் தொகுதிப் பங்கீட்டில் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த முறையை விட கூடுதல் இடங்களைக் கோரி வரும் நிலையில், சிறிய கட்சிகளைச் சமாதானப்படுத்துவது திமுக தலைமைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒருபுறம் கூட்டணிக் கணக்குகள் நீளும் வேளையில், மறுபுறம் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவதால் கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தி புகைச்சலாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த மோதலின் உச்சகட்டமாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இரண்டு தொகுதிகளைக் கோரிய நிலையில், திமுக ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்க முன்வந்ததால் அதிருப்தியடைந்த அவர், கடந்த ஐந்தாண்டு காலத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்கள் செய்த ஊழல் விபரங்கள் அனைத்தும் தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை விரைவில் வெளியிடப் போவதாகவும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். “இனிமேல்தான் திமுகவுக்கு இருக்கிறது” என்ற அவரது ஆவேசமான பேச்சு, தேர்தல் அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
வேல்முருகனின் இந்த திடீர் மாற்றத்தை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “ஊழல் விவரங்கள் முன்பே தெரியும் என்றால், எதற்காக திமுக கூட்டணியில் இணைய முயன்றீர்கள்?” என்றும், “திமுக கேட்ட இரண்டு தொகுதிகளைத் தந்திருந்தால் இந்த உண்மைகளை மறைத்து வாயை மூடிக்கொண்டிருப்பீர்களா?” என்றும் காரசாரமான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
கொள்கைக்காக இல்லாமல், தொகுதிகளுக்காக மட்டுமே ஊழல் குற்றச்சாட்டுகளைக் கையில் எடுப்பது அரசியல் சந்தர்ப்பவாதம் என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், திமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



