அரசை கவிழ்க்க முயற்சி – சியோனிசக் குழுக்களின் தொடர்பு இருப்பதாக பிரதமர் தகவல்
- Surendran Sumdraraj
- 03 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 3-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று, நாட்டின் தற்போதைய அரசை கவிழ்க்க முயன்றதாகக் கூறப்படும் சதித் திட்டத்தில் வெளிநாட்டு தரப்புகள் மட்டும் அல்லாமல், முன்னணி சியோனிசக் குழுக்களின் நேரடி தொடர்பும் இருப்பதாக வெளிப்படுத்தினார். இந்த விவகாரம் குறித்து மலேசிய அரசுப் போலீஸ் படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
விசாரணை இன்னும் நடைபெற்று வருவதால், முழுமையான தகவல்களை வெளியிடுவதற்கு சிறிது கால அவகாசம் வழங்குமாறு அனைத்து தரப்பினரிடமும் அவர் கேட்டுக் கொண்டார். விசாரணை நிறைவடைந்த பின்னர், தேவையானால் பொதுமக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல்கள் பகிரப்படும் என்று கூறினார்.
“யார் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை நாளை அறிந்தால், அவர்கள் முக்கிய சியோனிசக் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்பது வெளிப்படும். ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் காத்திருக்கவும்; உண்மை வெளிவந்த பிறகு அனைத்தும் தெளிவாக விளக்கப்படும்,” என பிரதமர் தெரிவித்தார்.
இஸ்லாமையும் காசாவை ஆதரிக்கும் நாடுகளையும் எதிர்க்கும் சியோனிசத் தலைவர்களை நாடி நமது நிலைப்பாட்டை பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



