மத்திய கிழக்கு மோதல் எதிரொலி – மலேசியாவின் உணவு பாதுகாப்பு இதுவரை சீராக உள்ளது
- Surendran Sumdraraj
- 05 Mar, 2026
புத்ராஜெயா, மார்ச் 5-
ஆசிய மேற்கு பகுதியில் நடைபெற்று வரும் மோதலால் மலேசியாவின் உணவு பாதுகாப்பு தற்போது பாதிக்கப்படவில்லை என வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது சாபு தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த மோதல் நீண்ட காலம் தொடர்ந்தால் இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் உயர வாய்ப்பு உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
மலேசியா இறக்குமதி செய்யும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் தற்போது மோதல் நிலவி வரும் நாடுகளிலிருந்து நேரடியாக வருவதில்லை. எனவே, உடனடி தாக்கம் ஏற்படவில்லை. ஆனால், போர் நீடித்தால் உலகளவில் எண்ணெய் விலை உயரக்கூடும். அதன் விளைவாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என அவர் விளக்கினார்.
“தற்போது உணவு பாதுகாப்பு தொடர்பில் பெரும் பிரச்சினை இல்லை. குறிப்பாக முக்கிய உணவுப் பொருட்கள் இன்னும் நிலையான நிலையில் உள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், அரசாங்கம் உலக நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சிகளையும் அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



