எதிர்க்கட்சித் தலைவராக டாக்டர் அக்மட் சாம்சூரி நியமிக்கப்பட வேண்டும் – ஜஹாருடின் முகமது
- Surendran Sumdraraj
- 16 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 16-
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவராக உள்ள டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஸைனுடினை விட, டத்தோ ஸ்ரீ டாக்டர் அக்மட் சம்சூரி மொக்தார் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படுவது சிறந்ததாக இருக்கும் என்று பாஸ் கட்சியின் சுங்கை புலோ பிரிவு தலைவர் ஜஹாருடின் முகம்மது கருத்து தெரிவித்துள்ளார்.
பாஸ் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கின் மருமகனான ஜஹாருடின், பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் செயல்பாடுகள் ஒருங்கிணைந்த முறையில் நடைபெறுவதற்கு இது அவசியம் என்று கூறினார்.
ஹம்ஸா ஸைனுடின் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்ந்தால், பெரிகாத்தான் நேஷனல் எடுக்கும் முடிவுகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாட்டுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரித்தார். குறிப்பாக பாராளுமன்றத்தில் இந்த நிலை உருவாகக்கூடும் என அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை ஜஹாருடின் மீண்டும் வலியுறுத்தினார். பாஸ் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் அல்லது கட்சியின் துணைத் தலைவர் டத்தோ இட்ரிஸ் அகமட் ஆகியோரில் ஒருவர் அந்தப் பதவிக்காகப் பரிந்துரைக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
மேலும், பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவி நாட்டின் நிர்வாகத்துடன் நேரடியாகத் தொடர்புடையதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் டாக்டர் சம்சூரி அல்லது டத்தோ ஸ்ரீ தகியூடின் ஹாசானை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



