ராமசாமி, வேதாவுடனான தொடர்பை பாஸ் தலைவர் தற்காக்கின்றார்!
- Muthu Kumar
- 15 Sep, 2025
அலோர்ஸ்டார், செட். 15-
நாட்டின் இரண்டு இந்தியர் கட்சிகளின் தலைவர்களுடன் பாஸ் கட்சி அதிகாரப்பூர்வ உறவை இன்னும் ஏற்படுத்திக் கொண்டிருக்கவில்லை.அதனால், பேராசிரியர் பி. ராமசாமி மற்றும் பி. வேதமூர்த்தியுடன் கூட்டணி வைத்திருப்பதன் மூலம், தனது கொள்கைகளை பாஸ் கட்சி அடமானம் வைத்து விட்டதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை பாஸ் கட்சியின் உலாமா மன்றத் தலைவர் அஹ்மாட் யஹ்யா மறுத்துள்ளார்.
மக்களைப் பாதித்து வரும் விவகாரங்கள் மீது கவனம் செலுத்துவதற்காக, ராமசாமி தலைமையிலான உரிமை மற்றும் வேதமூர்த்தி தலைமையிலான மலேசிய முன்னேற்றக் கட்சி கட்சி ஆகியவை, பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவையிலான தகர்தான் நேஷ்யி தலைவர் முஹிடின் யாசின் தலைமையிலான தளர்வு கூட்டணியில் மட்டும்தான் இடம் பெற்றிருப்பதாக அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
“அவ்விரு கட்சிகளுடன் ஒரு தேர்தல் உடன்பாடோ அல்லது ஒரு நிரந்தர கூட்டணியோ இன்னும் அமைக்கப்படவில்லை. ஆனால், வாழ்க்கைச் செலவினம் போன்ற விவகாரங்களை களையச் செய்வதற்கான ஒரு நோக்கத்தில் அவ்விரு கட்சிகளும் தளர்வு கூட்டணியில் இணைந்திருக்கின்றன.
"எங்களின் அரசியல் கூட்டணி ரீதியில் பாஸ் மற்றும் பெரிக்காத்தான் நேஷனலுக்கு இடையில் இந்த தளர்வுக் கூட்டணி வரவில்லை என்பதால், அதை நாங்கள் ஒரு விவகாரமாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்களின் கொள்கைகளுக்கு நாங்கள் துரோகம் செய்து விட்டதாக கூறப்பட்டு வருவது எங்களின் எதிரிகளின் வேலையாகும்” என்று அஹ்மாட் கூறியுள்ளார்.
கெடா, அலோர்ஸ்டாரில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை நடந்த உலாமா மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை அவர் தெரிவித்தார்.
மக்களை பாதித்து வரும் விவகாரங்களை வெளிப்படுத்துவது உட்பட மேலும் சில விவகாரங்கள் மீது கவனம் செலுத்துவதற்காக, ஒரு தளர்வு கூட்டணியை உருவாக்க, அரசாங்கத்திற்கு வெளியில் உள்ள 11 கட்சிகள் கடந்த மாதத்தில் இணக்கம் கண்டிருந்தன.
முஹிடின் தலைமையிலான அக்கூட்டணியில் பெர்சத்து, பாஸ், கெராக்கான், பெஜுவாங், மூடா, மலேசிய இந்திய மக்கள் கட்சி, புத்ரா, பெர்ஜாசா, உரிமை, மலேசிய முன்னேற்றக் கட்சி மற்றும் தேசிய இந்திய முஸ்லிம் கூட்டணிக் கட்சி ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன."
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



