மலேசிய இந்துக்களின் கனவு நனவாகிறது: 7.49 ஏக்கரில் மலேசியாவின் முதல் சைவ சமயக் கல்லூரி
- Tamil Malar (Reporter)
- 01 Dec, 2025
செய்தி-தி. கிரிஷன்
கெடா, டிச. 1-
2011 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மலேசிய சைவ சமயப் பேரவை மலேசிய இந்தியர்களின் சமய அறிவை வளப்படுத்தி வருவதோடு சைவ ஆகம நெறிகளுக்கு முரணான கிரியைகளைக் கைவிட்டு ஆகம விதி முறைகளுக்கு உட்பட்ட வழிபாட்டு முறைகளைக் கைக்கொள்வதற்கு வழிவகுக்கின்றது.
அவ்வகையில் சைவ சமயம் உள்ளிட்ட இந்து சமயக் கல்வியை மலேசிய இந்துக்களுக்குக் கற்பிக்கும் பொருட்டு அறிவும் ஆற்றலும் மிக்க சமய ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்றனை அமைக்கும் பணியில் சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியம் ஈடுபட்டு வருகின்றது.
கடந்த 29 நவம்பர் சனிக்கிழமையன்று மலேசிய சைவ சமயப் பேரவையின் ஏற்பாட்டில் கெடா, பாயா பெசார், கோ சாரங்கபாணி தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் நடைபெற்ற "சமயத்தின் வழி சமூக உருமாற்றம்" எனும் சமயக் கருத்தரங்கில் சைவ திருக்கோயில் கலை கல்வி அறவாரியத்தின் தலைவர் சிவதமிழ்ச்செல்வர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் இக்கருத்தினைப் பதிவிட்டார்.
அவர் கூறுகையில், சைவத் திருக்கோயில் கலைக் கல்வி அறவாரியத்திற்கு அரசாங்கத்தின் தொடர் ஆதரவும் கிடைத்துள்ளது. 2016 ஆம் ஆண்டு 7.49 ஏக்கர் நிலம் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள கெர்லிங் பட்டணத்தில் வாங்கப்பட்டு, தற்போது கட்டுமான நிலைக்கு முன்னேறி வருகின்றது.ஏறக்குறைய 9 அரசுத் துறைகளின் அனுமதி பெறப்பட்ட நிலையில் சிலாங்கூர் மாநில அரசின் அங்கீகாரத்துடன் இத்திட்டம் அமைந்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி இம்மாபெரும் முயற்சிக்கு 12 மில்லியன் ரிங்கிட் தொகையினைத் தம்மிடம் சைவ சித்தாந்தம் படிக்கும் சைவ மாணவர்கள் வழங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மலேசியாவில் முதல் இந்து சமயக் கல்லூரியாகவும் விளங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்த்ததை விட 100க்கும் மேற்பட்டோர் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு நிகழ்ச்சியினைச் சிறப்பித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



