பத்து வருடங்கள் கோமாவில் இருந்த நபர் குணமடைந்தார் ...காரணம் மனைவி!

top-news
FREE WEBSITE AD

மனைவியின் தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்பால் 10 வருடத்திற்கும் மேலாக கோமாவிலிருந்த கணவரை மீட்டெடுத்துள்ளார் பெண் ஒருவர்.

சீனாவைச் சேர்ந்த இந்தப் பெண்ணின் கணவர் 2014-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக சுய நினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றார். ஆனால் என்றாவது ஒருநாள் இந்த துயரத்திலிருந்து தன் கணவர் மீள்வார் என்ற நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இருந்தார் அந்தப் பெண்மணி. அதற்கு இப்போது பலன் கிடைத்துள்ளது. மனைவியின் குறையாத அன்பும் அக்கறையுமே அவரை குணமடைய வைத்துள்ளது.

இந்த தம்பதியரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் நல்ல விழிப்போடு இருக்கும் தனது கணவரின் அருகில் அவருடைய மனைவி ஹோன்சியா அமர்ந்திருக்கிறார். இத்தனை வருடங்களாக நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக மனைவி சொல்லும் போது, அவருடைய கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வருகின்றன.

எனக்கு மிக சோர்வாக இருந்தாலும், நாங்கள் குடும்பமாக மறுபடியும் ஒன்றிணையும் போது எல்லாமே சந்தோஷமாக மாறிவிடும் எனக் கூறுகிறார் ஹோன்சியா.

நான் இத்தனை வருடங்கள் மனம் தளராமல் நம்பிக்கையோடு இருந்ததற்கு என்னுடைய இரண்டு குழந்தைகளே காரணம். அவர்களுக்கு நான் நல்ல உதாரணமாக இருக்க விரும்பினேன். இத்தனை வருடங்களும் என் கவனம் முழுவதும் கணவரின் மீதுதான் இருந்தது. அவர் கோமாவில் இருந்தாலும் அவரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் கவனித்து கொள்வதிலேயே என்னுடைய நேரத்தையும் சக்தியையும் செலவழித்தேன் என தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார் ஹோன்சியா. .

நீண்ட நாள் கோமாவில் இருந்ததன் காரணமாக அவருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. மேலும் மூச்சுவிடுவதற்கு உதவியாக ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சையும் சிறுநீர் கழிப்பதற்கு வசதியாக வடிகுழாயும் பொறுத்தப்பட்டன. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இவருடைய இத்தனை ஆண்டுகள் உழைப்பும் வீண் போகவில்லை.

அவள் என்னுடைய மருமகள் தான். ஆனால் என் மகளை விட அவள் சிறந்தவளாக இருக்கிறாள். இவளோடு யாரையும் ஒப்பிட முடியாது என கோமாவில் விழுந்த நபரின் தந்தை ஹோன்சியாவின் தியாகத்தை மனமார பாராட்டுகிறார்.

இந்த வீடியோவை பார்த்த பல சோசியல் மீடியா பயனர்கள் இவர்களின் கதையை கேட்டு சந்தோஷம் அடைந்துள்ளனர். இதுதான் உண்மையான அன்பு என்றும் அவர் தேவதையை திருமணம் செய்திருக்கிறார் என்றும் பலர் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

சீனாவில் இதேப்போன்ற சம்பவம் ஒன்று 2019-ம் ஆண்டிலும் நடைபெற்றுள்ளது. 2013-ம் ஆண்டு நடைபெற்ற விபத்தொன்றில் கடுமையாக காயமடைந்து கோமா நிலைக்குச் சென்ற கணவரை, இரவு பகலாக கவனித்து வந்துள்ளார் அவருடைய மனைவி. ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கும் மேலாக அவரோடு அமர்ந்தும், சுத்தம் செய்துகொண்டும், பேசிக்கொண்டும் இருந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *