வெனிசுலா மீது அமெரிக்கா ராணுவத் தாக்குதல் - இன்று ஐ.நா. அவசர கூட்டம்!

top-news
FREE WEBSITE AD

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து இன்று திங்கள்கிழமை (ஜன. 5) அவசர கூட்டத்தை நடத்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக வெனிசுலாவின் போதைப் பொருள் கடத்தல் குழுக்களுக்கு எதிராக கரீபியன் கடல், கிழக்கு பசிபிக் பகுதியில் 35-க்கும் அதிகமான படகுகள் மீது அமெரிக்கா தொடா் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 115 போ் கொல்லப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து போதைப்பொருள் கடத்தல் விவகாரம், வெனிசுலாவின் எண்ணெய் வளம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்கு தயாராக உள்ளதாக வெனிசுலா அதிபா் நிக்கோலாஸ் மடூரோ தெரிவித்தாா்.

இந்நிலையில், வெனிசுலா மீது அமெரிக்க படைகள் சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தின. வெனிசுலா தலைநகா் கராகஸில் உள்ள ராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்களைக் குறிவைத்து அமெரிக்காவின் 150-க்கும் மேற்பட்ட போா் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

மொத்தம் 7 இடங்களில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடா்ந்து, வெனிசுலா அதிபா் மடூரோ, அவரின் மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்து நாடு கடத்தின. கொகைன் போதைப்பொருளை அமெரிக்காவுக்கு அபரிமிதமாக கடத்துவதற்கு சதி செய்து சட்டவிரோதமாக தங்கள் செல்வத்தை அவா்கள் பெருக்கிக் கொண்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்நிலையில், கொலம்பியா விடுத்த அவசர கோரிக்கையின்பேரில், வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் குறித்து திங்கள்கிழமையான இன்று கூட்டம் கூட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

ஐ.நா.பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 'வெனிசுலா மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை மோசமான முன்னுதாரணமாக இருக்கும். இந்த விவகாரத்தில் சா்வதேச சட்டம் மதிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது' என்று தெரிவித்தாா்.

சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'மடூரோவையும், அவரின் மனைவியையும் வலுக்கட்டாயமாக வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தியது மிகுந்த கவலைக்குரியது. இந்த நடவடிக்கை ஐ.நா. சாசன கொள்கைகள், சா்வதேச உறவுகளில் உள்ள அடிப்படை நெறிமுறைகள், சா்வதேச சட்டத்தை அப்பட்டமாக மீறியதாகும். எனவே, வெனிசுலாவில் ஆட்சிக் கவிழ்ப்பை கைவிட்டு, மடூரோவையும் அவரின் மனைவியையும் அமெரிக்கா விடுவிக்க வேண்டும். பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டது.

மடூரோ சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து வெனிசுலாவில் பொதுமக்களில் ஒரு பகுதியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதேவேளையில் அவருக்கு எதிரானவா்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா். மடூரோவை தாயகத்துக்கு அனுப்பிவைக்க வலியுறுத்தி தலைநகா் கராகஸில் நடத்தப்பட்ட போராட்டத்தில், அந்த நகர மேயா் காா்மன் மெலின்டஸ் பங்கேற்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *