புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக அம்னோவும் பெரிக்காத்தானும் பின்வாசல் வழியாக பேச்சு நடத்தவில்லை!
- Muthu Kumar
- 22 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 22-
புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியாக அம்னோ மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் பின்வாசல் வழியாக பேச்சுக்களை நடத்தியதாகக் கூறப்படுவதை, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷி வன்மையாக மறுத்திருக்கின்றார்.
அம்னோ தலைவர்களுடன் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான்தான் தொடர்பு கொண்டிருந்தார்."பின்வாசல் அரசாங்கத்தை" அமைப்பதற்கான ஒரு திட்டத்திற்கு ஒப்புக் கொண்டால், அதற்கு கைமாறாக அம்னோவுக்கு பிரதமர் பதவியை வழங்க துவான் இப்ராஹிம் முன்வந்ததாகவும் புவாட் கூறியதாக தெரிவித்தார்
"ஆனால், அத்தகைய ஒரு கருத்து அம்னோ உச்சமன்றத்திற்கு கொண்டுவரவோ அல்லது விவாதிக்கப்படவோ இல்லை. அப்படியே இந்த விவகாரம் உச்சமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தால், அதற்கு எதிராக குரல் கொடுத்திருக்கும் அல்லது எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் முதல் நபராக நான்தான் இருந்திருப்பேன்" என்று புவாட் கூறியதாக சினார் ஹரியான் நேற்று திங்கள்கிழமை செய்தி வெளியிட்டது.
பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான “கட்சித் தாவல் திட்டம்" குறித்து ஆராய்வது தொடர்பில் அம்னோ தலைவர்கள் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்களுடன் விவேகமான சந்திப்புகளை நடத்தியுள்ளனர் என்று துவான் இப்ராஹிம் கூறியிருப்பதற்கு பதிலளிக்கும் வகையில் புவாட் இவ்வாறு தெரிவித்தார்.
கிள்ளானில் நேற்றுமுன்தினம் நடந்த சிலாங்கூர் மாநில பாஸ் இளைஞர் பிரிவுக் கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றும்போது, "மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு கப்பல்" போன்ற அம்னோவிலிருந்து வெளியேறி பெரிக்காத்தானில் இணையுமாறு, கட்சித் தலைமைத்துவத்துடன் அதிருப்தி அடைந்திருக்கும் அம்னோ உறுப்பினர்களுக்கு துவான் இப்ராஹிம் அழைப்பு விடுத்திருந்ததாகவும் கூறப்பட்டது.
துவான் இப்ராஹிமின் இத்தகைய அழைப்பை முற்றாக நிராகரித்த புவாட், கடந்த காலத்தில் மூழ்கியது போன்ற ஒரு தவற்றை அம்னோ மீண்டும் செய்யாது என்றார்."அம்னோ மீண்டும் பாஸ் கட்சியின் சதி வலையில் விழாது என்பது துவான் இப்ராஹிமிற்கு நன்றாகவே தெரியும், இவை அனைத்தும் எங்களை ஏமாற்றுவதற்கான ஒரு வெறும் சூழ்ச்சிதான்.
"பெர்சத்து கட்சி ஒருபுறமிருக்க, பாஸ் கட்சியுடன் அம்னோ மீண்டும் இணைந்து பணியாற்றும் என்பது வெறும் கனவாகத்தான் இருக்கும்" என்று புவாட் குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து, ஆகக் கடைசியாக, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அம்னோ, பாஸ் மற்றும் பெர்சத்து ஆகியவை கூட்டுச் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்திருந்தன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



