சிலாங்கூரில் புகை மூட்டம்: பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்க பெற்றோர்களுக்கு அனுமதி!
- Muthu Kumar
- 25 Jul, 2025
ஷா ஆலம், ஜூலை 25-
தற்போது சூழ்ந்திருக்கும் புகை மூட்டத்தினால் தங்களின் பிள்ளைகளின் சுகாதாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சும் சிலாங்கூரைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
எனினும், சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் அது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளித் தரப்பினரிடம் அவசியம் தெரிவிக்க வேண்டும் என்று, சிலாங்கூர் மாநில பொதுசுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறியுள்ளார்.
சூழ்நிலைக்கேற்ப உடனடி மற்றும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, சுற்றுச் சூழல் இலாகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் மூலம் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டைக் கண்காணித்து வருமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களும் முதல்வர்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்" என்று நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.
தங்களின் பள்ளிகள் அமைந்திருக்கும் பகுதிகளில் காற்றின் தூய்மைக்கேட்டுக்
குறியீடு 100க்கும் மேல் அல்லது ஆபத்தான நிலையை அடையும்போது, எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை விவரிக்கும் வழிகாட்டிகளை சிலாங்கூரில் உள்ள அனைத்து பள்ளிகளும் பெற்றிருப்பதாக ஜமாலியா கூறினார்.
அனைத்து மாணவர்களின் சுகாதாரத்தையும்
பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்தி வைப்பது மற்றும் காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு 200ஐ தாண்டினால் அனைத்து பள்ளிகளும்
மூடப்பட வேண்டும் என்பதும் அந்நடவடிக்கைகளில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.புகை மூட்டத்தினால் சிலாங்கூரில் நோய் பரவி இருப்பதாக இதுவரையில் புகார் ஏதும் செய்யப்படவில்லை என்றும் வெப்ப பக்கவாதம் பதிவாகவில்லை என்றும் ஜமாலியா தெரிவித்தார்.
இந்நிலையில் சிலாங்கூர் மாநிலத்தில் இதுவரையில் பெட்டாலிங் ஜெயா, கிள்ளான், பந்திங் மற்றும் ஜொஹான் செத்தியா ஆகிய மாவட்டங்களில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 80 முதல் 88 வரையில் பதிவாகி இருப்பதாக அவர் கூறினார். இம்மாவட்டங்களில் இதற்கு முன்னர் அக்குறியீடு 150 ஆகப் பதிவாகி இருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



