தமிழ்நாட்டில் குளிர்சாதனப் பெட்டி வழி மின்சாரம் தாக்கி சிறுமி பலி!

top-news
FREE WEBSITE AD

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகேயுள்ள நந்தவன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் கௌதம் - பிரியா தம்பதியினர். கௌதம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வாங்கிக் கொடுக்கும் வேலை செய்து வருகிறார். கௌதம்-பிரியா தம்பதியினர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர்தான் ஆவடிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். 5 வயதான மூத்த மகள் ரூபாவதி அங்குள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்துள்ளார் சிறுமி ரூபாவதி. அப்போது குளிர்சாதன பெட்டியை திறந்து அதிலிருந்த தின் பண்டத்தை எடுத்துள்ளார்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி ரூபாவதி தூக்கி வீசப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் பிரியா, உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள ஆவடி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். குளிர்சாதனப் பெட்டியை திறந்தபோது மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவத்தை அறிந்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளிர்சாதனப் பெட்டி மிகவும் பழையானது என்பதால் அதிலிருந்து மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, குழந்தைகள் இருக்கும் வீட்டில் மின்சாதனப் பொருட்களை பயன்படுத்தும்போது பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்பதே காவல்துறையினரின் அறிவுறுத்தலாக உள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *