அபாய கட்டத்தில் இந்தியா: ஒரே ஒரு கேபிள் கட்டானாலும் அவ்வளவுதான்!
- Muthu Kumar
- 31 Mar, 2026
உலகம் முழுவதும் டிஜிட்டல் சார்ந்த வாழ்க்கை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கடலடியில் பதிக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு அமைப்புகள் மீது உருவாகும் அச்சுறுத்தல்கள் உலகளாவிய கவலையாக மாறியுள்ளன. குறிப்பாக செங்கடல் கேபிள் பாதையில் உருவாகும் பதற்றம், இந்தியாவைச் சேர்த்த பல நாடுகளின் இணையத் தளத்தையே பாதிக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது.
உலகின் 95%க்கும் அதிகமான இணையத் தரவுகள் கடலடியில் அமைக்கப்பட்டுள்ள ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மூலம் பரிமாறப்படுகின்றன. ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவை இணைக்கும் முக்கியக் கடல்வழி செங்கடல் பகுதி என்பதால், இங்கு ஏற்படும் எந்த பாதிப்பும் உலகளாவிய இணைய இணைப்பில் பெரிய சிக்கலை உருவாக்கும்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் இந்த பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக ஏமன் பகுதியில் செயல்படும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் வணிகக் கப்பல்களை மட்டுமல்லாமல் கடலடிக் கேபிள்களையும் குறிவைக்கப்போவதாக எச்சரித்துள்ளனர். 2025ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தில், கப்பலின் நங்கூரம் சிக்கியதில் பல கேபிள்கள் சேதமடைந்து தெற்காசியாவில் இணையத் தடை ஏற்பட்டது என்பது இதன் தீவிரத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்த அச்சுறுத்தல் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். UPI பரிவர்த்தனைகள், வங்கிச் சேவைகள், பங்குச்சந்தை மற்றும் ஐடி நிறுவனங்களின் சர்வதேச சேவைகள் அனைத்தும் இந்த கேபிள் இணைப்புகளையே சார்ந்துள்ளன. கேபிள்கள் சேதமடைந்தால், மின்னஞ்சல், வீடியோ அழைப்புகள், ஆன்லைன் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்தியா மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள 14 தரையிறங்கும் நிலையங்கள் மூலம் 17 கடலடிக் கேபிள்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு பாதையில் பாதிப்பு ஏற்பட்டாலும் மாற்று வழிகள் மூலம் சேவைகளைத் தொடர முடியும். ஆனால் செங்கடல் போன்ற முக்கியப் பாதையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டால், இணைய வேகம் குறைவதும் சேவை தடையும் தவிர்க்க முடியாததாகும்.
இந்நிலையில், மாற்று தரவு பாதைகள் உருவாக்குவது மற்றும் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வலுப்படுத்துவது முக்கியமாகிறது. குறிப்பாக Satellite Internet போன்ற தொழில்நுட்பங்கள் இந்தியாவிற்கு பாதுகாப்பான மாற்று வழியாக அமையும்.
மொத்தத்தில், கடலடிக் கேபிள்கள் மீது உருவாகும் அச்சுறுத்தல்கள் இனி பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியாக முக்கிய விவகாரமாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் இந்தியா போன்ற நாடுகள் தொழில்நுட்ப தன்னிறைவை நோக்கி நகர்வதே இத்தகைய சவால்களை சமாளிக்கும் ஒரே நிலையான வழியாக பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



