தலைநகரில் இந்திய ஆடவர் சுட்டுக் கொலை! போலீஸ் அதிரடி

top-news
FREE WEBSITE AD

(இரா.கோபி}

கோலாலம்பூர், ஆக 6: கோலாலம்பூர், ஜாலான் புக்கிட் துங்குவில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில், கொள்ளை மற்றும் வீடு புகுந்து திருடும் கும்பலின் தலைவர் என்று நம்பப்படும் இந்திய ஆடவர்  ஒருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட 44 குற்ற வழக்குகளில் ஏற்கெனவே இதற்கு முன்னர் தண்டனை பெற்ற 36 வயது சந்தேக நபர், அதிகாலை 4.10 மணிக்கு புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் கோலாலம்பூர் காவல் தலைமையகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினரால் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அந்த பகுதியில் பிஎம்டபிள்யூ கார் சென்றதை அடுத்து, சம்பந்தப்பட்ட வாகனத்தை நிறுத்த அதிகாரிகள் முயன்றபோது துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது. இதன் விளைவாக சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார், என்று புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை தற்காலிக இயக்குநர் ஃபாடில் மார்சஸ் சம்பவம் நடந்த இடத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சந்தேக நபரின் வாகனத்தை சோதனை செய்ததில் ஒரு ரிவால்வர், கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல கருவிகள் மற்றும் ஒரு போலீஸ் உடை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

சோதனைகளில் காரில் போலி பதிவுத் தகடுகள் இருப்பதும், அது நாட்டிற்குள் கடத்தப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், இந்தக் கும்பல் குடியிருப்பு வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை குறிவைத்து, பெட்டகங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டு வந்ததாகத் தெரிகிறது என்று ஃபாடில் கூறினார்.

கொள்ளைச் சம்பவங்களின் போது, கும்பல் உறுப்பினர்கள் போலீஸ் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்ததாக நம்பப்படுகிறது.

 இந்தக் கும்பல் கடந்த ஆண்டு முதல் தீவிரமாக செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர்,  கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில்  கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் 10 லட்சம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஃபாடில் கூறினார்.

இந்தக் குழு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையது என்றும்,  12 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பதாகவும் தாங்கள் நம்புவதாக அவர் கூறினார்.

இந்நிலையில், தொடர் நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட இந்தத் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் காவல்துறை தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதாக அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *