எல்லைக்கோட்டில் மயங்கி விழுந்த இந்திய வீரர் - தோளில் சுமந்து சென்ற சீன ராணுவ வீரர்கள்!
- Muthu Kumar
- 17 Dec, 2025
இந்திய சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (LAC) அருகே உள்ள உயரமான மலைப்பகுதியில், ஆக்சிஜன் குறைபாடு காரணமாக இந்திய ராணுவ வீரர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார்.இதைக் கவனித்த அப்பகுதி சீன ராணுவ வீரர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து சென்று பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர்.
அங்கு அவருக்குத் தேவையான முதலுதவி மற்றும் மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை நடைமுறைகளின்படி, அந்த வீரர் இந்திய அதிகாரிகளிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார். இந்த நெகிழ்ச்சியான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக 2020-ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் வழிதவறி வந்த சீன வீரருக்கு இந்திய ராணுவம் உணவு மற்றும் மருத்துவ உதவி வழங்கி திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ குறித்து இருவேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. 1996 மற்றும் 2005-ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின்படி, எல்லையில் இக்கட்டான நிலையில் இருக்கும் வீரர்களுக்கு உதவுவது இரு நாடுகளின் கடமை என்றாலும், கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு நிலவும் கசப்பான சூழலில் இத்தகைய காட்சிகள் அரிதானவை என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
அதேவேளையில், வீடியோவில் இந்திய வீரரின் கால்கள் கட்டப்பட்டிருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு தரப்பினர், இது சீனாவின் திட்டமிடப்பட்ட பிம்பம் உருவாக்கும் முயற்சியாக (Propaganda) இருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்புகின்றனர். எனினும், மருத்துவ அவசர காலங்களில் மலைப்பாங்கான கரடுமுரடான பாதையில் நோயாளியைக் கொண்டு செல்லும்போது கூடுதல் காயங்கள் ஏற்படாமல் இருக்க கைகால்களைக் கட்டுவது மருத்துவ நடைமுறைதான் என்றும் விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



