தமிழ்ப்பள்ளிகளை பராமரிக்கும் நோக்கத்திற்காக ஒரு கோடியே 90 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீடு!
- Muthu Kumar
- 24 Aug, 2025
ஈப்போ, ஆக.24-
இவ்வாண்டு, நாடு முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளி, SBK தகுதி கொண்ட தேசிய வகை தமிழ்ப்பள்ளிகளை பராமரிக்கும் நோக்கத்திற்காக கல்வி அமைச்சு ஒரு கோடியே 90 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
கடந்த ஆண்டு விண்ணப்பித்த அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட ஒரு கோடியே 81 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது இத்தொகை அதிகமாகும் என்று கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
"இந்த ஆண்டு, நாங்கள் ஒதுக்கீட்டை ஒரு கோடியே 90 லட்சத்து 90 ஆயிரம் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளோம். இந்த ஒதுக்கீடு ஆகஸ்ட் மாதத்தில் விநியோகிக்கப்பட்டது. தற்போது தற்போது பள்ளி மேலாளர் வாரியங்களுக்கு இந்த ஒதுக்கீடு கிடைத்திருக்கும்," என்றார் அவர்.நேற்று கிந்தா உத்தாராவில் நடைபெற்ற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான பராமரிப்பு ஒதுக்கீடு வழங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு வோங் செய்தியாளர்களிடம் பேசினார்.
தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது,பள்ளி உள்கட்டமைப்பைப் பாதுகாப்பாகவும் உகந்ததாகவும் இருப்பதை உறுதி செய்யும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை நிரூபிப்பதாகவும் வோங் கூறினார். முன்னதாக, கிந்தா உத்தாரா மாவட்டத்தில் உள்ள எட்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு எட்டு லட்சத்து 10 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீட்டை அவர் வழங்கினார்.
பேராக் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு 2024ஆம் ஆண்டு 41 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்ட நிலையில் இவ்வாண்டு 44 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக வோங் கா வோ கூறினார். தேவையான பராமரிப்பு அல்லது மேம்பாடுகளைச் செய்ய அந்த ஒதுக்கீடுகளை பள்ளிகள் பயன்படுத்தப்படுத்தலாம் என்றும் அவர் விவரித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



