பள்ளிகளில் “இன்ஃபுளூவென்சா” காய்ச்சல்- கல்வியமைச்சு தீவிர நடவடிக்கை!
- Muthu Kumar
- 11 Oct, 2025
கோலாலம்பூர், அக். 11-
நாடு முழுவதும் "இன்ஃபுளுவென்சா" போன்ற நோய் (ஐஎல்ஐ) சம்பவங்கள் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, பள்ளிகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கல்வியமைச்சு வலுப்படுத்தி வருகிறது.
அத்தொற்று பள்ளிகளிலும் தீவிரமாகப் பரவி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த தக்க நடவடிக்கையை கல்வியமைச்சு மேற்கொண்டு வருகிறது.
"இன்ஃபுளூவென்சா" தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் சிலாங்கூர் ஆகும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அத்தொற்றுப் பரவல் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்வு கண்டுள்ளது. அதில் 65 விழுக்காடு
கல்விக்கழகங்கள் ஆகும்.
பதில் நடவடிக்கையாக, அம்மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மாநில - மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்கள் வாயிலாக முறையான சுற்றறிக்கைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அறிக்கைகளில் நோய்த் தடுப்பு வழிகாட்டிகள் இடம்பெற்றுள்ளன.
"இன்ஃபுளூவென்சா" தொற்றுக்கான அறிகுறிகள் தென்படும் மாணவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை பள்ளிகள் மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த வழிகாட்டிகள் தெரிவிக்கின்றன.
மேலும், நோய் அறிகுறிகள் தென்படும் மாணவர்கள்தாங்கள் முழுமையாக குணமடையும் வரையில் வீட்டிலேயே தங்கியிருப்பதை ஆசிரியர்கள் உறுதிசெய்ய வேண்டும். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்குச் செல்லும்போது மாணவர்களும் பள்ளிப் பணியாளர்களும் முகக்கவசம் அணிந்திருப்பதையும் ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் கல்விமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



