மக்களிடம் மோடியால் முகத்தைக் கூட காட்ட முடியாது" - ராகுல் பேச்சு!
- Muthu Kumar
- 02 Sep, 2025
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறது என்றும், அது தொடர்பான அணுகுண்டை வீசப்போகிறேன் என்றும் முன்பு தெரிவித்தார்.
அதன்படி, கர்நாடகாவில் மத்திய பெங்களூரு மக்களவைத் தொகுதியில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேல் வாக்குமோசடி நடந்திருப்பதாக பகிரங்கமாக ஆதாரங்களை வெளியிட்டார்.
இந்த நிலையில், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் மீது அடுத்த அடியாக ஹைட்ரஜன் குண்டு வீசப்போவதாக ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். பீகாரில் இந்தியா கூட்டணி நடத்திவந்த வாக்காளர் அதிகார யாத்திரையின் (Voter Adhikar Yatra) நிறைவு நாளான இன்று தலைநகர் பாட்னாவில் யாத்திரை முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "பா.ஜ.க தலைவர்களிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
அணுகுண்டை விட பெரியது எதுவென்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா,அதுதான் ஹைட்ரஜன் குண்டு.தயாராக இருங்கள், ஒரு ஹைட்ரஜன் குண்டு வருகிறது. மிக விரைவில், வாக்கு திருட்டு பற்றிய உண்மை வெளிவரும்.அந்த ஹைட்ரஜன் குண்டு வெடித்த பிறகு, நாட்டு மக்களிடம் நரேந்திர மோடி தனது முகத்தைக் காட்ட முடியாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
'vote chor, gaddi chhod' முழக்கத்தை நான் இங்கு எழுப்பினேன், மக்களும் அதை முழங்கினார்கள்.இப்போது அது சீனாவிலும் எதிரொலிக்கிறது. அமெரிக்காவிலும் மக்கள் அதைச் சொல்கிறார்கள்" என்று கூறினார்.
ராகுல் காந்தியின் ஹைட்ரஜன் குண்டு பேச்சுக்கு உடனடியாக எதிர்வினையாற்றிய பீகார் பாஜக எம்.பி ரவிசங்கர் பிரசாத், "அணுகுண்டு என்று அவர் அழைத்தது முட்டாள்தனமாக மாறிவிட்டது. அணுகுண்டுகளுக்கும் ஹைட்ரஜன் குண்டுகளுக்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்?
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறார். அவரது நடத்தை கண்ணியமாக இருக்க வேண்டும்.21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருப்பது வாக்காளர் பட்டியலில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.இருப்பினும் அவர்கள் தொடர்ந்து வாக்காளர் பட்டியலிலேயே இருக்க வேண்டுமா?அவர் ஏன் பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்க மறுக்கிறார்? அவர் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
மேலும், இதில் பொய் சொன்னால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அவருக்குத் தெரியும்" என்று டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



