வாக்காளர் பட்டியல் திருத்தம்: அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!
- Muthu Kumar
- 02 Nov, 2025
ஸ்டாலின் தலைமையில் இன்று (நவம்பர் 2) சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் அவசர அவசரமாக இந்தச் சீராய்வுப் பணிகளைச் செயல்படுத்துவதால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும், இதன் பின்னணியில் உள்ள 'வாக்குரிமையைப் பறிக்கும் சதி' குறித்தும் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை பெய்யும் என்பதால், இந்த நேரத்தில் வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்வது சிரமம் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்தக் கோரிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து, திட்டமிட்டபடி SIR பணிகள் நடைபெறும் என்று அறிவித்ததாலேயே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.
தியாகராய நகரில் உள்ள அக்கார்டு ஓட்டலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, தி.க. தலைவர் கி. வீரமணி, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி, கொ.ம.தே.க. தலைவர் ஈஸ்வரன், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா, கம்யூனிஸ்ட் தலைவர்கள் சண்முகம் மற்றும் வீரபாண்டியன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
அழைப்பு விடுக்கப்பட்டும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி, ராமதாஸின் பா.ம.க. உள்ளிட்ட சில கட்சிகள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தன. அதேசமயம், அ.தி.மு.க., பா.ஜ.க., டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க., மற்றும் அன்புமணி (பா.ம.க. தலைவர்) ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும், SIR நடவடிக்கையை அவசர அவசரமாகச் செயல்படுத்துவது முறையற்றது என்றும், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை நயவஞ்சகமாகப் பறிக்கும் சதித்திட்டம் இதனுள் இருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவித்தனர்.
விவாத முடிவில், ஜனநாயகத்துக்கும் சட்டத்திற்கும் விரோதமான SIR நடவடிக்கையை இந்தியத் தேர்தல் ஆணையம் உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை எதிர்க்கவில்லை என்றும், ஆனால் அதற்குப் போதுமான கால அவகாசமும், நடைமுறைச் சிக்கல்கள் இல்லாத செயல்பாடும் தேவை என்றும் வலியுறுத்தப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



