“மூடி மறைக்கும்” அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது-ஃபட்லினா!
- Muthu Kumar
- 17 Oct, 2025
கோலாலம்பூர், அக். 17-
பள்ளிகளில் நடக்கும் பிரச்சினைகள் "மூடி,, மறைக்கப்படுகின்றன என்ற கல்வி தலைமை இயக்குநரின் அண்மைய அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று. கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.பள்ளிகளில் நடக்கும் தவறுகளை "மூடி மறைக்க கல்வி அமைச்சு அல்லது பள்ளிகள் முயன்றன என்று. அஸாம் அஹ்மாட் வெளியிட்ட அறிக்கை அர்த்தம் கொண்டிருக்கவில்லை.
ஆனால், சில விவகாரங்கள் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள், ஆலோசனை வழங்குபவர்கள் அல்லது கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருப்பதாக, ஃபட்லினா தெரிவித்தார்.
எனினும், இவற்றில் பல சம்பவங்கள் கடுமையானவை என்று கருதப்படவில்லை என்றும் அதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வழி வகுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பள்ளிகளில் நிகழும் பிரச்சினைகள் தொடர்பில் முன்கூட்டியே வெளிப்படும் சமிக்ஞைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படுவதை உறுதிப்படுத்துவதற்கான தனது வழிமுறைகளை தமது அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
பள்ளிகளில் நடக்கும் பகடிவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை "மூடி மறைக்கும் போக்கிற்கு எதிராக அஸாம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்ததோடு, அவை குற்றச் செயல்கள் என்பதால் அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி இருந்தார்.
மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த நான்கு ஐந்தாம் படிவ மாணவர்கள் கூட்டுச் சேர்ந்து 15 வயது மாணவியிடம் பாலியல் வன்கொடுமை புரிந்த சம்பவம் தொடர்பில், பெரிக்காத்தான் நேஷனலின் தெமர்லோ நாடாளுமன்ற உறுப்பினர் சலாமியா நோர் எழுப்பிய ஒரு கேள்விக்கு ஃபட்லினா அவ்வாறு பதிலளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



