பழனி முருகன் கோவில் நில விவகாரம்: சிபிஐ விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
- Surendran Sumdraraj
- 16 Jul, 2026
சென்னை, ஜூலை 16-
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலம் தொடர்பான முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், சுமார் ரூ.100 கோடி மதிப்புடையதாகக் கூறப்படும் கோவில் நிலம், வெறும் ரூ.2 கோடி மதிப்பில் தனியார் ஒருவரின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். இதனை சாதாரண அலுவலகத் தவறாகக் கருத முடியாது என்றும், சம்பந்தப்பட்ட அமைச்சர் தவறு நிகழ்ந்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளதால் முழுமையான விசாரணை அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
நிலம் யாருடைய பெயருக்கு மாற்றப்பட்டது, பத்திரப் பதிவு தொடர்பான விவரங்கள் ஏன் பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை, இதன் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார் என்பன குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
முதலில் நிலத்தைப் பதிவு செய்ய மறுத்த சார்பதிவாளர் மாற்றப்பட்டு, மற்றொரு அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னர் பத்திரப் பதிவு நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



