பாஸ் ஒருபோதும் அம்னோவுடன் கூட்டணி வைக்கத் - பாஸ் தலைவர் ஹாடி அவாங் திட்டவட்டம்
- Surendran Sumdraraj
- 13 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 13-
பாஸ் கட்சி ஒருபோதும் அம்னோ முன்னெடுக்கும் ரூமா பங்சா கூட்டணியில் இணையாது என அக்கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் அடி அவாங் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் அம்னோ முன்னெடுத்ததாகக் கூறப்படும் “ருமா பங்சா” (Rumah Bangsa) சந்திப்பு, இஸ்லாம் அடிப்படையில் இல்லாமல் தேசிய உணர்வை மட்டும் மையமாகக் கொண்டு மலாய் ஒற்றுமையை உருவாக்க முயலும் முயற்சியாகத் தெரிகிறது என்று அவர் மேலும் சொன்னார்.
அரசாங்கத்தை அமைப்பதற்காக அம்னோ இன்னும் டிஏபியுடன் நட்பு மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வைத்திருப்பதாகவும், அதற்காக தங்களின் ஆரம்பக் கொள்கைகளை விட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
அம்னோவின் ஆரம்பப் போராட்டத்தில் மதம் அதன் அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது அந்தப் போராட்டத்தின் அடிப்படைகளுக்கு எதிராக சில நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
அவர் மேலும் கூறுகையில், அந்த நிலைமையால் சில உறுப்பினர்கள் “சுவர்கள் உடைந்தும், கூரை துளைத்தும், மழை புகும் வீட்டை விட்டு வெளியேறுவது போல” கட்சியை விட்டு விலகிச் சென்றதாகக் கூறினார்.
“சிலர் பாஸ் உடன் சேர்ந்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர். இன்னும் சிலர், இஸ்லாம் மற்றும் மலாய் மக்கள் தான் நாட்டின் தலைவர்களாக இருக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கின்றனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கடந்த பொதுத் தேர்தல் (PRU-15) முதல் இளைஞர் வாக்காளர்கள் அரசியலை அதிக முதிர்ச்சியுடன் சிந்திக்கத் தொடங்கியுள்ளதாகவும், அதனால் அவர்கள் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை நிராகரித்ததாகவும் அப்துல் ஹாடி கூறினார்.
அதற்கு முன்பு அவர்கள் பாரிசான் நேஷனல் கூட்டணியையும் நிராகரித்ததை அவர் நினைவுபடுத்தினார்.
பக்காத்தான் கூட்டணி டிஏபி போன்ற இஸ்லாமுக்கு எதிரானதாகக் கூறப்படும் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயல்படுவதும், அதிகாரத்தை மெதுவாகப் பிடிக்கும் அரசியல் முயற்சிகளை முன்னெடுப்பதும் அந்த நிராகரிப்பிற்கான காரணங்களில் ஒன்றாகும்.
அவர் மேலும் கூறுகையில், சில மலாய் தலைவர்களும் அந்த அரசியல் அணுகுமுறைக்கு ஆதரவளித்து, அம்னோ உட்பட சில கட்சிகள் அதே அணியில் நிற்கும் நிலை உருவாகியுள்ளது என்றார்.
இந்த சூழ்நிலையை எடுத்துக்காட்டாகக் கொண்டு பாஸ் கட்சி, அம்னோ முன்வைத்த “ருமா பங்சா” முயற்சியில் சேர தயாராக இல்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
பாதுகாப்பற்ற கூரையின் கீழ் இருக்கும் வீட்டைப் போன்ற அமைப்பில் பாஸ் இணைவதற்கு தயாரில்லை.
“அதைவிட மோசமானது, கூரையுமில்லாத சுவர்களுமில்லாத வீட்டைப் போல அமைந்தால் அதில் பேய்கள் குடியிருந்து அங்கு வாழ்பவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையும் உருவாகலாம்,” என்று அவர் உவமையாகக் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



