வழிதவறிய காட்டு யானையை மீட்டு காட்டில் விடுவித்த வனத்துறை
- Surendran Sumdraraj
- 12 Mar, 2026
ஜெர்தே, மார்ச் 12-
திரங்கானு மாநில வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை (PERHILITAN), ஹுலு பெசுட் பகுதியில் வழிதவறி கிராமப்பகுதிக்குள் வந்த ஆண் காட்டு யானையை வெற்றிகரமாக மீட்டு அதன் இயற்கை வாழ்விடத்திற்கு மாற்றியுள்ளது.
அதன் இயக்குநர் டென்னிஸ் டென் சூன் யூங் தெரிவித்ததாவது, ஹுலு பெசுட் காட்டு காப்பகத்தில் உள்ள கம்போங் கெருவாக் பகுதியிலிருந்து வழிதவறி கம்போங் பாசிர் ஆகர் கிராமத்துக்குள் வந்த இந்த யானை கடந்த மார்ச் 5ஆம் தேதி முதல் அப்பகுதியில் காணப்பட்டதாகக் கூறினார்.
சுமார் 30 வயதுடையதாகவும், மூன்று டன் எடையுடையதாகவும் மதிப்பிடப்பட்ட அந்த ஆண் யானைக்குத் தந்தங்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை அந்த யானை பிடிக்கப்பட்டது.
காட்டு யானையைச் சிறப்பு லாரியில் ஏற்றும் நடவடிக்கை நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணியளவில் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அவர் கூறினார். பின்னர் இன்று அந்த யானை அதன் இயற்கை வாழ்விடமான காட்டு பகுதிக்குப் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.
இந்த மீட்பு நடவடிக்கையில் சுங்கை டேகா யானை பாதுகாப்பு மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட “சூரியா” மற்றும் “இந்தா” என்ற இரண்டு பெண் பயிற்சி யானைகள் உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



