மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் 30-ஆவது ஆண்டுப் பொதுப் பேரவை

top-news
FREE WEBSITE AD

தி.கிரிஷன்

போர்ட்டிக்சன்,  மார்ச் 10

மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் (MIYC) இன்று தனது 30-வது ஆண்டுப் பொதுப் பேரவையைப் போர்ட் டிக்சனில் உள்ள குளோரி பீச் ரிசார்ட்டில் (Glory Beach Resort) நடத்தியது. நாடு முழுவதிலுமிருந்து சுமார் 300 பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இந்த விழாவை நெகிரி செம்பிலான் மந்திரி பெசார், மாண்புமிகு டத்தோ ஶ்ரீ உத்தாமா ஹாஜி அமினுடின் பின் ஹாஜி ஹருண் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். சமுதாயம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து அவர் ஆற்றிய உரையில் வலியுறுத்தினார். மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் போன்ற இளைஞர் மன்றங்கள் வருங்காலத் தலைவர்களை உருவாக்குவதற்கும், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் சுய முன்னேற்ற வாய்ப்புகள் மூலம் இளைஞர்களை வலுப்படுத்துவதற்கும் ஒரு தளமாகத் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கும் சமுதாய முன்னேற்றத்திற்கு ஊக்கமாக இருப்பதற்கும் இளைஞர்கள் அறிவு, நேர்மை மற்றும் தன்னம்பிக்கையுடன் முன்வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மாநிலம் மற்றும் நாட்டின் பலம் பல்லின மக்களின் ஒற்றுமையில் இருப்பதாக அரசாங்கம் நம்புகிறது. நெகிரி செம்பிலான் மாநிலமானது மலாய், சீன, இந்திய மற்றும் பல்வேறு இனத்தவர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் பிணைப்பால் உருவானது. இவர்களே மாநிலத்தின் முன்னேற்றத்திற்குப் பங்காற்றுகின்றனர். பல்வேறு பின்னணிகளைக் கொண்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து இன்னும் வலுவான, நிலையான, வளமான எதிர்காலத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும்.” என மாண்புமிகு மந்திரி பெசார் அவர்கள் குறிப்பிட்டார்.

அதே நிகழ்வில், GenRLS 2.0 (Generation Rise, Lead, Serve) எனப்படும் மலேசிய இந்தியர் இளைஞர் மன்றத்தின் தலையாயத் திட்டத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்க நிகழ்வை அவர் முன்னின்று நடத்தி வைத்தார். இத்திட்டம் மலேசிய இந்திய இளைஞர்களிடையே தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பதற்கான ஒரு பயிற்சியாகும். இந்த திட்டம் Akademi Kenegaraan Malaysia வுடன் இணைந்து, 'மலேசியா மடானி’ தேசியப் பாடநெறி மற்றும் MIYC யின் தலைமைத்துவ வலுப்படுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞர் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், MIYC யின் திட்டங்கள் மற்றும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்காக RM20,000 மானியத்தையும் மந்திரி பெசார் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஶ்ரீ தஞ்சுங் சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு டத்தோ டாக்டர் ராஜசேகரன் குணசேகரன், செரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மதிப்புமிகு டத்தோ குணசேகரன் பழசாமி, நெகிரி செம்பிலான் இளைஞர் மன்றத் தலைவர் முகமட் ஃபைரோஸ் ருஸ்லி, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைப் பிரதிநிதிகள் மற்றும் பிற இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மலேசிய இந்திய இளைஞர்களின் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் அமைப்பின் எதிர்காலப் பயணத்தைப் பற்றி விவாதிக்க நாடு முழுவதிலுமிருந்தும் வந்த பேராளர்களின் முக்கியத் தளமாக இந்த 30-வது ஆண்டுப் பொதுப் பேரவை அமைந்தது.

இந்நிகழ்வின் திறப்புனராக வந்ததற்கும், இளைஞர் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு மாநில அரசு தொடர்ந்து அளித்து வரும் அதரவை மதிக்கும் வகையில் மந்திரி மாண்புமிகு பெசார் டத்தோ ஶ்ரீ உத்தாமா ஹாஜி அமினுடின் அவர்களுக்கு மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *