அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து ஈரான் ஜனாதிபதியுடன் பிரதமர் மோடி ஆலோசனை
- Surendran Sumdraraj
- 01 Jul, 2026
புதுடெல்லி, ஜூலை 1 –
அமெரிக்கா–ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை மற்றும் மேற்கு ஆசியாவின் தற்போதைய சூழல் குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
இந்த உரையாடலின்போது, மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். மேலும், அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தை முன்னேறுவதற்கு தொடர்ந்து இருதரப்பும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் சர்வதேச கடல் போக்குவரத்து மற்றும் வர்த்தகச் சங்கிலிகள் பாதுகாப்பாக இயங்குவது உலக பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
இந்த உரையாடலின் போது, மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய பதற்ற நிலை மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன், பிரதமர் மோடிக்கு விளக்கமளித்ததாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவும் ஈரானும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய இருநாடுகளும் தொடர்ந்து ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



