மீண்டும் ஒரு சந்தேக நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்!
- Tamil Malar (Reporter)
- 25 Nov, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
கோலா லும்பூர், நவ. 25-
பந்திங்-டெங்கில் சாலையின் 8-ஆவது கிலோமீட்டர் பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சம்பவத்தில் ஒரு கொள்ளைக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (JSJ) கடுமையான குற்றங்கள் பிரிவு (D9) அதிகாரிகள், பந்திங், டெங்கில், சிப்பாங் பகுதிகளில் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்க நடத்திய சிறப்பு நடவடிக்கையின்போது இச்சம்பவம் நிகழ்ந்தது.
துறைத் தலைவர் டத்தோ எம். குமார் கூறுகையில், “இரவு 8.10 மணியளவில் டெங்கில் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த பெரோடுவா மைவி காரை நிறுத்தி சோதனையிட முயன்றோம். அப்போது காரில் இருந்த நபர் திடீரென போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதால், போலீசார் பதிலடி கொடுத்தனர். அத்தாக்குதலில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்” என்றார்.
சந்தேக நபரிடமிருந்து ஒரு துப்பாக்கியும் சில தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



