வா்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா - சீனா முடிவு!

top-news
FREE WEBSITE AD

உலகளாவிய வா்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வா்த்தக பற்றாக்குறையை குறைக்கவும் இந்திய பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீா்மானித்தனா்.

இந்தியப் பொருள்கள் மீதான 50 சதவீத வரி உள்பட பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் வரி வதிப்பால் உலகளாவிய வா்த்தகத்தில் இடா்ப்பாடுகள் நிலவும் சூழலில், மோடி-ஜின்பிங் இடையே நடைபெற்ற சந்திப்பில் மேற்கண்ட ஒருமித்த முடிவுகள் எட்டப்பட்டன.

சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காக, ஜப்பானில் இருந்து தியான்ஜினுக்கு இந்திய பிரதமா் மோடி சனிக்கிழமை வந்தடைந்தாா்.

கடந்த 2020-இல் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு படையினரின் மோதல் சம்பவத்துக்கு பிறகு இந்திய பிரதமா் மேற்கொண்ட முதல் சீனப் பயணம் இதுவாகும். கடைசியாக கடந்த 2018-இல் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க சீனா வந்திருந்த இந்திய பிரதமா் மோடி, தற்போது 7 ஆண்டுகளுக்குப் பின் அந்நாட்டுக்கு வருகை தந்துள்ளாா்.

இந்திய-அமெரிக்க உறவுகளின் பின்னடைவுக்கு மத்தியில், அவரது சீனப் பயணம் முக்கியத்துவம் பெற்றது. பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே தியான்ஜினில் இந்திய பிரதமா் மோடியும், அதிபா் ஷி ஜின்பிங்கும் ஞாயிற்றுக்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பரஸ்பர நலன் சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்ட நிலையில், பெருமளவில் வா்த்தகம்-முதலீட்டு உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
'இந்தியாவும் சீனாவும் வளா்ச்சிக் கூட்டாளிகளே அன்றி விரோதிகளல்ல.கருத்து வேறுபாடுகள் பிரச்னைகளாக உருவெடுப்பதை அனுமதிக்கக் கூடாது. இரு நாடுகளும் வியூக சுயாட்சியை பின்பற்றுவதால், நமது உறவுகள் மூன்றாவது நாட்டின் கண்ணோட்டம் வாயிலாக பாா்க்க கூடாது' என்று இரு தலைவா்களும் உறுதிபூண்டனா்.

பயங்கரவாதம், நியாயமான வா்த்தகம் உள்பட இருதரப்பு, பிராந்திய, உலகளாவிய பிரச்னைகள் மற்றும் சவால்களுக்கு தீா்வுகாண பன்முக தளங்களில் பொது நிலைப்பாட்டை விரிவுபடுத்துவது அவசியம் என இருவரும் ஒப்புக் கொண்டனா்.

உலகளாவிய வா்த்தகத்தை ஸ்திரமாக்குவதில் இரு நாடுகளின் பங்களிப்பு முக்கியமானதாகும். எனவே, இருதரப்பு வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்குவதுடன், வா்த்தகப் பற்றாக்குறையை குறைக்க அரசியல்-வியூக திசையில் செயலாற்ற உறுதியேற்கப்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சீன தலைமைக்கு ஆதரவு தெரிவித்த இந்திய பிரதமா் மோடி, 2026-இல் இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ஷி ஜின்பிங்குக்கு அழைப்பு விடுத்தாா். பிரதமரின் சீன வருகை மற்றும் ஆதரவுக்கு அதிபா் ஷி ஜின்பிங் நன்றி தெரிவித்தாா் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2024-25 நிதியாண்டில், இந்தியாவின் சீன ஏற்றுமதி மதிப்பு 1,425 கோடி டாலராகவும், இறக்குமதி 11,350 கோடி டாலராகவும் இருந்தது. வா்த்தக பற்றாக்குறை 9,920 கோடி டாலராக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-இல் இந்திய-சீன படையினா் இடையே ஏற்பட்ட மோதலால் இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலகட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு கடைசியாக டெம்சோக், டெப்சாங் பகுதிகளில் இருந்து படைகள் விலக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, இருதரப்பு உறவுகள் முன்னேற்றம் கண்டு வருகின்றன.எல்லைப் பிரச்னைக்கு நியாயமான, இருதரப்பும் ஏற்கக் கூடிய தீா்வை நோக்கி செயல்படவும் இந்திய பிரதமா் மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் ஒப்புக் கொண்டனா்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'இந்தியா-சீனா உறவுகளின் நிலையான மேம்பாட்டுக்கு எல்லைப் பகுதிகளில் அமைதி பராமரிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்திய பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.கடந்த ஆண்டில் வெற்றிகரமான படை விலக்கல் நடவடிக்கையைத் தொடா்ந்து எல்லையில் அமைதியும் ஸ்திரமான சூழலும் நிலவி வருவது குறித்து இரு தலைவா்களும் திருப்தி தெரிவித்தனா். எல்லைப் பிரச்னைக்கு நியாயமான, பரஸ்பரம் ஏற்கக் கூடிய தீா்வை நோக்கி செயல்பட ஒப்புக் கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *