அமெரிக்காவை நேருக்கு நேர் மிரட்டிய ஈரான் தளபதி!
- Muthu Kumar
- 01 Feb, 2026
மத்திய கிழக்கு ஆசியாவில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சூழ்ந்துள்ளன. ஈரானின் எல்லையை ஒட்டி அமெரிக்கா தனது பிரம்மாண்ட ‘அர்மாடா’ (Armada) கடற்படையைக் குவித்து வரும் நிலையில், ஈரான் ராணுவ தளபதி அமீர் ஹடாமி அமெரிக்காவுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவின் ராணுவ நகர்வுகளைக் கடுமையாகச் சாடினார்.“எதிரி நாடு ஏதேனும் ஒரு சிறிய தவறு செய்தாலும், ஈரான் ராணுவம் உடனடியாகவும் மிகக் கடுமையாக பதிலடி கொடுக்கும். எங்களது படைகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன. அமெரிக்கா தனது கடற்படையைக் குவித்து எங்களை மிரட்ட முடியாது. ஒருவேளை அவர்கள் தாக்குதல் நடத்தினால் அது அமெரிக்காவுக்கும், அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் பேரழிவைத் தரும்.”
ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா குறிவைப்பதாக வரும் தகவலுக்குப் பதிலளித்த அவர், “ஈரானின் அணு தொழில்நுட்பம் என்பது எங்களது விஞ்ஞானிகளின் ரத்தத்தில் ஊறியது. அதை எந்தப் படையாலும், எந்தத் தாக்குதலாலும் அழித்துவிட முடியாது. எங்கள் நாட்டுப் பாதுகாப்பாளர்களையும் விஞ்ஞானிகளையும் கொன்றாலும் இந்தத் தொழில்நுட்பம் அழியாது” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அந்நாட்டில் நடந்து வரும் உள்நாட்டுப் போராட்டங்களைக் காரணம் காட்டியும் USS ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்ட போர்க்கப்பல்களை ஈரான் அருகே நிலைநிறுத்தியுள்ளார். இதற்குப் பதிலடியாக, ஈரான் தனது ‘ஹார்முஸ்’ நீரிணை பகுதியில் நேரடி துப்பாக்கிச் சூடு ஒத்திகையை (Live-fire drills) இன்று தொடங்க உள்ளது.
ஒரே ஒரு தவறான நகர்வு நடந்தாலும் அது உலகப்போராக மாறக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஈரானின் 1000-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாகத் தளபதி அமீர் ஹடாமி கூறியிருப்பது அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



