எங்களை தாக்கினால் பதிலடி கொடுப்போம்-இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை!
- Muthu Kumar
- 18 Jul, 2025
எங்களை தாக்கினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேலுக்கு ஈரான் உயர் தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், இதனால், தங்கள் நாட்டிற்கு ஆபத்து ஏற்படும் என கூறிய இஸ்ரேல், அந்நாட்டின் மேல் போர் தொடுத்தது. 12 நாட்கள் நீடித்த இந்த போரில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள், குறிவைத்து தாக்கப்பட்டன. மேலும், இந்த தாக்குதலில், ஈரானின் அணுசக்தி திட்டங்கள், ராணுவ தளங்கள் சேதமடைந்தது. மேலும் முக்கிய படை தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது.
மேலும் இந்த போரில் அமெரிக்காவும் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை தாக்கியது. இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இதையடுத்து அமெரிக்காவின் தலையீட்டை தொடர்ந்து இந்த போர் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி மீண்டும் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறுகையில், 'இஸ்ரேல் அதன் வேர்களிலிருந்து அழிக்கப்பட வேண்டிய புற்றுநோய் கட்டி போன்றது. அமெரிக்காவின் செல்ல நாய் போல இஸ்ரேல் இருக்கிறது. அதன் உத்தரவுகளின்படி விளையாடுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும் இஸ்ரேலை நம்ப முடியாது.
எந்த நேரத்திலும் ஈரான் தாக்கப்படலாம். அவ்வாறு நடந்தால், கடந்த மாதத்தை போல கடுமையாக பதிலடி கொடுப்போம். அமெரிக்காவும் அதன் செல்லப்பிராணி இஸ்ரேலும் சண்டைக்கு வந்தாலும், ஈரானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் ஒரு அடி பின்வாங்க வேண்டும்.
பாலஸ்தீனர்களுக்கு எதிரான தாக்குதல்களை தொடர்ந்தால், இஸ்ரேல் இன்னும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். மத்திய கிழக்கில் இஸ்ரேலை அமெரிக்கா ஊக்குவித்து வருகிறது. இஸ்ரேலின் செயல்களுக்கு அமெரிக்கா முழு பொறுப்பேற்க வேண்டும்' என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



