தர்மஸ்தலா வழக்கில் திருப்புமுனை-மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

top-news
FREE WEBSITE AD

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் புகழ்பெற்ற தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் உள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தக் கோவிலில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர் ஒருவர் தனது பணிக்காலத்தில் 100க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், மாணவிகளை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சடலங்களை, நேத்ராவதி ஆற்றின் கரையோரமாக உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளிட்ட இடங்களில் புதைக்கவும், எரிக்கவும் உடந்தையாக இருந்ததாக நீதிபதி முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

உயிருக்கு பயந்து இந்த செயலை செய்ததாக அவர் கூறியிருக்கிறார். இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமல்லாது நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. இளம் பெண்களின் சடலங்கள் மிகவும் மோசமான முறையில் பாலியல் கொடுமை செய்யப்பட்டு இருப்பதை பார்த்து கதிகலங்கி போனேன் எனவும் தன்னால் அந்த நேரத்தில் எதையும் செய்ய முடியவில்லை, நான் மிரட்டப்பட்டிருந்தேன், அவர்கள் எல்லாம் செல்வாக்குமிக்கவர்கள் எனவும் அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

இச்சம்பவம் குறித்து கடந்த 4ஆம் தேதி போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை ஜூலை 19ஆம் தேதி அன்று கர்நாடக அரசு அமைத்துள்ளது.

இந்த நிலையில் குற்றம்சாட்டிய தூய்மைப் பணியாளர் சுட்டிக்காட்டிய 15 இடங்களில் ஜே.சி.பி இயந்திரம் உள்ளிட்டவைகளுடன் தோண்டிப்பார்க்கும் பணிகள் தொடங்கின. 2 நாட்களாக 5 இடங்களில் தோண்டிப்பார்த்தும் எதுவும் கிடைக்காத நிலையில், 3வது நேற்று 6வது இடத்தில் தோண்டிய போது மனித எலும்புக்கூடுகள் சிதைந்த நிலையில் கிடைத்தன.

தடயவியல் குழு, பரிசோதனைக்காக எலும்புக்கூடுகளை மீட்டெடுத்துள்ளது. மேலும் ஆதாரங்களைக் கண்டறிய உதவுவதற்காக ஒரு மோப்ப நாய் படை அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது, நேரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள் காரணமாக எலும்புகள் சிதறியிருக்கக்கூடும் என்பதால் தோண்டும் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த குறிப்பிட்ட இடத்தில் 2 உடல்கள் புதைக்கப்பட்டதாக தூய்மைப் பணியாளர் கூறியிருந்தார், எலும்புக்கூடுகள் மிகவும் சிதைந்த நிலையில் இருப்பதாகவும், ஆதாரங்களை சேகரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக கயிறு, ஆடை, அச்சுப்பொறி மற்றும் மடிக்கணினி போன்ற கூடுதல் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

தகவல்களின்படி, தூய்மைப் பணியாளர் சுட்டிக்காட்டிய 8 இடங்கள் நேத்ராவதி ஆற்றின் கரையில் உள்ளன, அதே நேரத்தில் 9 முதல் 12 வரையிலான இடங்கள் ஆற்றின் அருகே நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளன. 13வது இடம் நேத்ராவதியை ஆஜுகுரியுடன் இணைக்கும் சாலையில் உள்ளது, மீதமுள்ள இரண்டு இடங்கள் நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள கன்னியாடி பகுதியில் உள்ளன.
6வது இடத்தில் கிடைத்த இந்த எலும்புக்கூடுகள் இந்த விவகாரத்தில் முக்கிய திருப்புமுனையாக மாறியிருக்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *