புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல்: கோபத்தில் ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி உருக்கம்!
- Muthu Kumar
- 30 Dec, 2025
2026-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி வந்தால், ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், அது உக்ரைனின் வேலை என்றும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் குற்றம் சாட்டியுள்ளார்.
புதின் வீட்டின் மீது 91 டிரோன்கள் ஏவப்பட்டதாகவும், ஆனால், அனைத்தும் தகர்க்கப்பட்டன என்றும் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதனால், பேச்சுவார்த்தையில் ரஷ்யா தனது நிலைப்பாட்டை மாற்றும் என்றும் கூறியுள்ளார்.
புதின் வீட்டின் மீது நடந்த தாக்குதல் குறித்து ட்ரம்ப், "புதினிடம் பேசி இந்தச் சம்பவம் குறித்து தெரிந்துகொண்டேன். எனக்கு மிகக் கோபம். நடந்த சம்பவம் எனக்கு பிடிக்கவில்லை. இது நல்லதல்ல" என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
ஆனால், இந்தச் சம்பவத்தை முற்றிலும் மறுத்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "அதிபர் ட்ரம்ப் குழுவின் போர் நிறுத்த முயற்சியைக் குலைக்கத்தான் ரஷ்யா இப்படிச் செய்கிறது.
புதின் வீட்டின் மீதான தாக்குதல் என்பது புனைவுக் கதை. போர் நிறுத்தத்தைத் தடுக்கத்தான் ரஷ்யா இதைச் செய்கிறது. இது ரஷ்யாவின் வழக்கமான பொய்.
ரஷ்யா கிய்வ் நகர் மீதும், அமைச்சரவை மீதும் ஏற்கெனவே தாக்குதல் நடத்தி உள்ளது. ஆனால், பதில் தாக்குதல் நடத்தினால், போர் நிறுத்த முயற்சி பாதிக்கப்படும் என்று உக்ரைன் எதுவுமே செய்யவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



