கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியே விருது!
- Muthu Kumar
- 12 Nov, 2025
நாளை சென்னையில் நடைபெறும் விழாவில், திரைப்பட கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு செவாலியே விருதினை பிரான்ஸ் தூதர் வழங்கி சிறப்பிக்க இருக்கிறார். இந்தியத் திரைப்படத் துறையில் தனித்துவமான கலை வடிவமைப்புகளால் புகழ் பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் மதிப்புமிகு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படக் கலைக்காக ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி பிரான்ஸ் கலாசார துறை இந்த விருதை வழங்குகிறது.
தமிழ் உட்பட பல மொழித் திரைப்படங்களில் தத்ரூபமான செட் அமைப்புகளுக்கு பெயர்ப்பெற்றவர் தோட்டா தரணி. நாயகன் படத்தில் தாராவி பகுதியை சென்னையிலேயே உருவாக்கியது, இந்தியன் படத்தின் சுதந்திரப் போராட்டக் காட்சிகள், சிவாஜி படத்தின் 'வாஜி வாஜி' பாடல் செட் என பல படங்களில் அவரது கலைத் திறன் பாராட்டப்பட்டது.
மேலும் தசாவதாரம், காதலர் தினம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய அவர், சமீபமாக குபேரா, ஹரிஹர வீர மல்லு, காட்டி போன்ற திரைப்படங்களுக்கும் கலை வடிவமைப்பு செய்திருந்தார். திரைப்படக் கதை, வரலாறு, கலை வடிவமைப்பு என பல துறைகளில் ஆழ்ந்த அறிவு கொண்ட அவர், பல இயக்குநர்களின் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்த விருது நாளை நவம்பர் 13ம் தேதி சென்னை அலையன்ஸ் பிரான்சே வளாகத்தில் நடைபெறும் விழாவில், பிரான்ஸ் தூதர் வழங்கி கெளரவிக்கிறார். அலையன்ஸ் பிரான்ஸ் வளாகத்தில் தற்போது தோட்டா தரணியின் ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகில் இதற்கு முன்னதாக நடிகர்கள் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் செவாலியே விருதைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



