ஆசியான் மாநாட்டிற்காக டிரம்ப் மலேசியா வருகிறார்!
- Muthu Kumar
- 01 Aug, 2025
கோலாலம்பூர், ஆக. 1-
வரும் அக்டோபர் மாதத்தில் கோலாலம்பூரில் நடைபெற விருக்கும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோலாலம்பூர் வரவிருப்பதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மக்களவையில் நேற்று வியாழக்கிழமை, 13ஆவது மலேசிய திட்டத்தை தாக்கல் செய்யும்போது, டிரம்பின் மலேசியா வருகையை அன்வார் அறிவித்தார்.கடந்த ஜூலை 10ஆம் தேதி, பிரதமர் அலுவலகத்திற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மரியாதை நிமித்தமாக வருகை தந்தபோது, அவர் மூலம் டிரம்பிற்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட பின்னர் அவரின் வருகை உறுதிப்படுத்தப்பட்டதாக அன்வார் தெரிவித்தார்.
மலேசியாவுக்கு வருகை புரிந்த கடைசி அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா ஆவார். அவர் தமது பதவிக் காலத்தில் 2014ஆம் ஆண்டு ஏப்ரலிலும் பின்னர் 2015ஆம் ஆண்டு நவம்பரிலும் இரண்டு முறை மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளார். இந்நிலையில், டிரம்ப் இன்று வெள்ளிக்கிழமை மலேசியப் பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவிப்பார் என்றும் அன்வார் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 8ஆம் தேதி. அமெரிக்கா அனைத்து மலேசியப் பொருட்களுக்கும் 25 விழுக்காட்டு வரியை அறிவித்திருந்தது. இன்றைய வரி விதிப்பில், ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட விழுக்காட்டைவிட ஒரு விழுக்காடு உயர்த்தப்பட்டிருக்கிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



