ஒரு தமிழனாக அண்ணாமலைக்குத் தான் எப்போதும் துணையாக நிற்பேன் - சீமான்!
- Muthu Kumar
- 14 Jan, 2026
மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தின்போது, "மும்பை மராத்தியர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, அது ஒரு பன்னாட்டு நகரம்" என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, "அண்ணாமலை மும்பையில் கால் வைத்தால் அவர் கால்களை வெட்டுவேன்" என்று வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியிருந்தார். ராஜ் தாக்கரேவின் இந்த மிரட்டலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் அரசியல் கருத்துகளோடு தாம் முற்றிலும் முரண்பட்டாலும், ஒரு தமிழனாக அவருக்கு இழைக்கப்படும் அவமானத்தை ஏற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
தாய்மொழி உரிமைக்காகவும், மண்ணின் மைந்தர்களின் உரிமைக்காகவும் போராடும் மராத்தியர்களின் கொள்கையைத் தான் மதிப்பதாகக் குறிப்பிட்ட சீமான், ஒரு கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, வன்முறையைப் பேசுவது முறையல்ல என்று தெரிவித்துள்ளார்.
"அண்ணாமலை ஒரு கட்சியின் தலைவராக இருக்கலாம், ஆனால் அவர் முதலில் தமிழ்த் தேசிய இனத்தின் மகன்" என்று குறிப்பிட்ட அவர், அண்ணாமலைக்கு எதிரான ராஜ் தாக்கரேவின் பேச்சு ஒட்டுமொத்த தமிழ் மக்களையுமே அவமதிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார். அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து, ஒரு தமிழனாக அண்ணாமலைக்குத் தான் எப்போதும் துணையாக நிற்பேன் என்றும் சீமான் தனது அறிக்கையில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



