அரசை கவிழ்க்கும் சதி குற்றச்சாட்டு – மேலும் 14 பேர் விசாரணைக்கு அழைப்பு
- Surendran Sumdraraj
- 19 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 19-
அரசை கவிழ்க்கும் சதி மற்றும் தேசிய நிலைத்தன்மையைப் பாதிக்கும் வகையிலான சபோட்டாஜ் நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டில், மேலும் 14 பேரை போலீசார் விரைவில் விசாரணைக்காக அழைக்க உள்ளனர் என தேசிய காவல்துறைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் அனைத்து நபர்களும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடவடிக்கைகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுகின்றன என்றும் கூறினார்.
“விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. போலீசார் தொடர்ந்து ஆதாரங்களை ஆய்வு செய்து, தேவையான மேலதிக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 14 பேர் விரைவில் அழைக்கப்படுவார்கள்,” என்று அவர் இன்று புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், அனைத்து விசாரணை செயல்முறைகளும் முடிவடைந்த பிறகு, சம்பந்தப்பட்ட விசாரணை அறிக்கை சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு (AGC) அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு நாட்டின் அரசியல் நிலைத்தன்மையைப் பாதிக்கும் வகையில் இருப்பதாக கருதப்படுவதால், இது குறித்து அதிகாரிகள் தீவிர கவனத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



