சல்லியர்கள் திரைப்படத்தைப் புறக்கணிக்கும் தியேட்டர்களுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்!
- Thinagaren Sanggaren
- 03 Jan, 2026
ஜனவரி 3,
சல்லியர்கள் எனும் தமிழீழ வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ் நாட்டில் வெளியாகியிருக்கும் திரைப்படத்திற்குத் தமிழ்நாட்டில் திரையரங்குகள் வழங்காமல் புறக்கணிக்கும் தரப்பிற்கு உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இயக்குநர் தீ.கிட்டுவின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும்
தமிழ் உணர்வுள்ள திரைப்படமான சல்லியர்கள் திரைப்படம் தமிழ் நாட்டிலேயே புறக்கணிக்கப்படுவதாகத்
தமிழ் ஆர்வளர்கள் பலரும் அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையில் உலகத் தமிழர்
பாதுகாப்பு செயலகம் கண்டனத்தைப் பதிவு செய்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன்
வீராசாமி தெரிவித்துள்ளார்.
மேதகு எனும் ஈழ வரலாற்று திரைப்படத்தை இயக்கிய, இயக்குனர் தீ.கிட்டுவின் அடுத்த படைப்பான ஈழ போராட்டத்தின் பின்னணியில் இந்த "சல்லியர்கள்" எனும் திரைப்படம் உருவாகியிருக்கிறது. தமிழர் வரலாற்றையும் தமிழர் ஈகத்தையும் திரைப்படமாக எடுக்கும் தமிழர்களுக்கு எதிராகத் தமிழர் அல்லாதவர் செய்யும் சதி இது என பாலமுருகன் வீராசாமி குற்றம்சாட்டினார்.
தமிழ்நாடுத் திரைத்துறையைத் தமிழரல்லாதவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் சல்லியர்கள் திரைப்படத்தைப் புறகணித்திருப்பதாகவும் தமிழர் அடையாளங்களை அழிப்பதாகவும் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
அண்மையில் இத்திரைப்பட இயக்குனர் தீ.கிட்டு மற்றும் தயாரிப்பாளர் சுரேசு காமாட்சி ஆகியோர் திரையரங்கு கிடைக்காத வேதனையைச் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததைக் கண்டு தாம் மனம் வேதனை அடைந்ததாகவும் தமிழருக்கு எதிரான சிக்கல், தமிழ்ப் படைப்புகளுக்கு எதிரான தடை என அதிகார வர்க்கத்தால் திட்டமிட்டு நிகழ்த்துபவர்களைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என பாலமுருகன் வீராசாமி வலியுறுத்தினார்.
ஈழப் போராட்டத்தின் ஒரு பக்தியாக, போரில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவப் பிரிவினர் செய்த மருத்துவ உதவிகளையும் அவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்களையும் வரலாற்றுப் பிழை இல்லாது திரைப்படமாக உருவாகியிருக்கும் சல்லியர்கள் திரைப்படம் தற்போது (OTT Plus) என்ற இயங்கலை தளத்தில் வெளியாகி உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



