பேராக்கில் 14 தொகுதிகள் மொகிதீனை பதவி விலக வலியுறுத்து
- Tamil Malar (Reporter)
- 11 Dec, 2025
ஈப்போ, டிச. 11-
பேராக் மாநிலத்தில் உள்ள பெர்சாத்து கட்சியின் 14 தொகுதிகள் நேற்று ஒருமித்த குரலில் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ மொகிதின் யாசினை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தின.
பாசிர் சாலாக் பெர்சாத்து தொகுதி தலைவர் டத்தோ ஜைனோல் பாட்ஸி பஹாருடின் தலைமையிலான இக்குழு வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் பிரதமர் மொகிதீன் யாசின் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட நலனைவிட கட்சியின் நலனை முன்னிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“78 வயதான மொகிதின் இன்னும் தீர்க்கப்படாத நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டிருக்கிறார். அவர் தொடர்ந்து தலைவராக இருந்தால், வரவிருக்கும் 16-ஆவது பொதுத் தேர்தலில் பெர்சாத்து அனைத்துத் தொகுதிகளிலும் நிராகரிக்கப்படும் அபாயம் உள்ளது. இது கட்சிக்கும், பெரிகாத்தான் நேசனல் (பிஎன்) கூட்டணிக்கும் பெரும் ஆபத்தாக மாறிவிடும்” என்று ஜைனோல் பாட்ஸி எச்சரித்தார்.
முன்னாள் பேராக் பெர்சாத்து செயலாளருமான ஜைனோல் பாட்ஸி, மொகிதின் தன்னைத்தானே மறுஆய்வு செய்து கொண்டு, கட்சியின் உறுமாற்றத்திற்குப் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பேராக் மாநிலத்தில் பெர்சாத்துக்கு மொத்தம் 24 தொகுதிகள் உள்ள நிலையில், பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகள் (14) இவ்வாறு ஒரே குரலில் தலைவருக்கு எதிராக நிற்பது கட்சிக்குள் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



