இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் – இரண்டாவது பிலிப்பைன்ஸ் பெண் உயிரிழப்பு
- Surendran Sumdraraj
- 07 Apr, 2026
மனிலா, ஏப். 7-
மத்திய கிழக்குப் பகுதியில் நடைபெற்று வரும் போர் மேலும் ஒரு பிலிப்பைன்ஸ் குடிமகளின் உயிரை பறித்துள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசு இன்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் வசித்து வந்த ஒரு பிலிப்பைன்ஸ் பெண்ணின் வீட்டை ஏவுகணை தாக்கியதில் இந்த சம்பவம் இடம்பெற்றது.
இந்த பெண், ஞாயிற்றுக்கிழமை ஹைபா துறைமுக நகரில் உயிரிழந்தார். அவருடன் அவரது இஸ்ரேல் கணவரும், வயதான மாமனாரும் மாமியாரும் உயிரிழந்ததாக பிலிப்பைன்ஸ் வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக அவர்களின் அடையாளம் வெளியிடப்படவில்லை.
இஸ்ரேல் மீட்புப்படை நேற்று வெளியிட்ட தகவலின்படி, ஒரு குடியிருப்பு கட்டிடம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றதையடுத்து, அதன் இடிபாடுகளில் இருந்து நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இஸ்ரேல் ஊடகங்கள், உயிரிழந்த பிலிப்பைன்ஸ் பெண்ணை ‘லூசில்-ஜீன்’ என அடையாளம் கண்டுள்ளன. மீட்பு பணியாளர்கள் பல மணி நேரங்களாக மேற்கொண்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு, இடிந்து விழுந்த அவரது வீட்டின் இடிபாடுகளில் இருந்து அவர் மற்றும் அவரது குடும்பத்தினரை வெளியேற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



