TLDM ஊழல்: 21 வங்கி கணக்குகள் முடக்கம், மூத்த அதிகாரியின் சொத்துகள் பறிமுதல்
- Tamil Malar (Reporter)
- 26 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 26-
மலேசிய கடற்படை (TLDM) தொடர்பான திட்டங்களின் கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள், தற்போது நாட்டளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ‘ஒப் லாயர்’ (Op Layar) விசாரணையின் கீழ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) 21 வங்கி கணக்குகளை முடக்கி, சுமார் RM2 மில்லியன் மதிப்புள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்துள்ளது.
SPRM தகவலின்படி, முடக்கப்பட்ட கணக்குகளில் ஏழு கணக்குகள் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை ஆகும். மீதமுள்ள 14 கணக்குகள் சில தனிநபர்களின் பெயரில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கணக்குகளில் மொத்தமாக சுமார் 7லட்சம் வெள்ளி இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விசாரணை, TLDM-இன் ஒரு மூத்த அதிகாரி தனது நெருங்கிய தொடர்புடைய (க்ரோனி) நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அவற்றை திட்டப் பணிகளுக்குப் பரிந்துரை செய்து நியமித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகிறது.
SPRM-இன் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட சோதனைகளின் போது, சம்பந்தப்பட்ட அதிகாரிக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் இரண்டு ஹோட்டல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு சுமார் 2 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்புடைய இந்த ஊழல் விவகாரம், பொதுமக்களிடையே நம்பிக்கை, பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என SPRM வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



