மலேசியத் திறனாளர் கழகத்தின் (TalentCorp) புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி நியமனம்
- Tamil Malar (Reporter)
- 15 Apr, 2026
ஏப்ரல் 15,
மலேசியாவின் திறனாளர் மேம்பாட்டுத் திட்டங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மலேசியத் திறனாளர் கழகத்தின் (டேலண்ட் கார்ப்) புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதற்கான நியமனக் கடிதத்தை இன்று அவரிடம் நேரில் வழங்கினார். இந்த நியமனம் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.இந்த நியமனம் குறித்துப் பேசிய டத்தோஸ்ரீ ரமணன், இன்றைய நவீன தொழில்துறைத் தேவைகளுக்கு ஏற்ப நம் நாட்டு மக்களின் திறன்களை மேம்படுத்துவதற்கு இது ஒரு சரியான முடிவாகும் என்று குறிப்பிட்டார்.
அரசாங்கம், கல்வி மற்றும் தொழில்துறை என பல்வேறு முக்கியத் துறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பிருந்தா, டேலண்ட் கார்ப் நிறுவனத்தை மிகச் சிறப்பாக வழிநடத்துவார் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். “புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதிலும், தொழில்துறைக்குத் தேவையான தகுதியான ஆட்களை உருவாக்குவதிலும் பிருந்தா அவர்களின் அனுபவம் நாட்டிற்கு ஒரு பெரிய பலமாக இருக்கும். குறிப்பாக, தற்போதுள்ள சவாலான பொருளாதாரச் சூழலில் இவரது தலைமைத்துவம் மிக முக்கியமானது,” என்று அமைச்சர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பிருந்தாவின் தலைமையின் கீழ், டேலண்ட் கார்ப் நிறுவனம் நாட்டின் வேலைவாய்ப்புச் சந்தையை வலுப்படுத்துவதோடு, மலேசியர்களுக்குச் சிறந்த மற்றும் தரமான வேலைவாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். அதே சமயம், இதற்கு முன் இந்தப் பொறுப்பை வகித்த எட்வர்ட் லிங் ஆற்றிய சிறந்த பணிகளுக்காக டத்தோஸ்ரீ ரமணன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். புதிய பொறுப்பை ஏற்கும் பிருந்தா மூர்த்தி, தனது பணியில் பெரிய வெற்றிகளைப் பெற்று நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும் என அமைச்சர் மனதார வாழ்த்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



