புக்கிட் தாகார் பன்றி வளர்ப்பு திட்டம் ரத்து – மாற்று இடம் தேடும் சிலாங்கூர் அரசு
- Tamil Malar (Reporter)
- 26 Jan, 2026
ஷா ஆலாம், ஜன.26-
சிலாங்கூர் மாநிலத்தின் ஹூலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள புக்கிட் தாகர் பகுதியில் முன்மொழியப்பட்ட பன்றி வளர்ப்பு திட்டத்தை ரத்து செய்து, தற்காலிகமாக ஒத்திவைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்குப் பதிலாக, பொருத்தமான மாற்று இடம் அல்லது சிறந்த செயல்முறை கண்டறியப்படும் வரை திட்டம் முன்னெடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமீருடின் ஷாரி கூறுகையில், இந்த முடிவு கடந்த வாரம் நடைபெற்ற மாநில நிர்வாகக் குழு (MMKN) கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அந்தக் கூட்டத்தில், உட்கட்டமைப்பு, வேளாண்மைத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம், புக்கிட் தாகார் பகுதியில் இந்தத் திட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக விளக்கினார்.
“பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் இந்தத் திட்டத்தை முதலில் நிறுத்துமாறு ஆலோசனை வழங்குவதற்கு முன்பே, மாநில நிர்வாகக் குழு மாற்று இடங்களைத் தேட உத்தரவிட்டது. அப்பகுதியில் மக்களின் கடும் எதிர்ப்பை நாம் கவனத்தில் எடுத்துள்ளோம்,” என அமீருடின் ஷாரி கூறினார்.
மேலும், பிரதமரின் பரிந்துரையை தாம் வரவேற்றதாக தெரிவித்த அவர், இதுவரை எந்த மாற்று இடமும் இறுதியாக முடிவுசெய்யப்படாததால், புதிய இடங்கள் அல்லது மாற்று யோசனைகள் குறித்து தற்போது அறிவிக்க முடியாது என்றார்.
மாநில அரசின் இந்த முடிவு, உள்ளூர் மக்களின் கவலைகளுக்கும் கருத்துகளுக்கும் அரசு முக்கியத்துவம் அளிப்பதை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



