பள்ளிகளில் பிரம்படி தண்டனையை பிரதமர் ஆதரிப்பது வருந்தத்தக்கது - பேராசிரியர் இராமசாமி!
- Muthu Kumar
- 25 Oct, 2025
பினாங்கு, அக். 25-
பள்ளிகளில் கடுமையான விதிமுறைகளின் கீழ் பிரம்படி தண்டனை வழங்கலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரைத்தது எண்ணிப்பார்க்க முடியாத ஒன்று.அன்வார் ஒருகாலத்தில் ஆசிரியராக இருந்திருக்கலாம், அவர் குறும்பு செய்யும் மாணவர்களை பிரம்பால் அடித்திருக்கலாம்.
துரதிர்ஷ்டவசமாக, அது அக்காலம் அப்போது ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோருக்கிடையில், மாணவர்களை ஒழுங்குபடுத்த பிரம்படி பயன்படுத்தப்படலாம் என்ற நிலைமை இருந்தது.அந்தக் காலத்தில் பிரம்படி தண்டனை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது; ஆனால் இன்று அது பொருந்தாது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் ஆகியோரிடையே கல்வி விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், இத்தகைய தண்டனைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்று பேராசிரியர் பி.இராமசாமி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இன்றைய பெற்றோர்கள் பிரம்படி தண்டனைக்கு அனுமதி வழங்குவதற்கு முன் இருமுறை, மூன்றுமுறை யோசிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.நாடு மரண தண்டனையை கட்டாயமாக வழங்கும் நடைமுறையை நிறுத்தும் நிலைக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், மாணவர்களை ஒழுங்குபடுத்த "பிரம்படி”முறையை அன்வார் பரிந்துரைப்பது அதிர்ச்சிகரமானது.
மாணவர்களின் நடத்தையைச் சீரமைப்பதில் சமூக அறிவியல், குறிப்பாக உளவியல் அணுகுமுறை ஏன் இல்லை?இன்றைய ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கல்வி நிர்வாகிகள் பெரும்பாலும் உள்ளூர் அல்லது வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகள். சிலர் முதுநிலைப் பட்டங்களையும் பெற்றுள்ளனர்.
கல்வித் துறையில் கல்வி பெற்றவர்கள், மாணவர்கள் ஏன் ஒழுங்கு மீறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம் என்பதை அறிந்திருக்க வேண்டும். மாணவர்களை பிரம்பால் அடிப்பது அவர்களை மீண்டும் தவறு செய்யாமல் பயமுறுத்துவதேயன்றி, அவர்கள் ஏன் தவறு செய்யக்கூடாது என்பதை உணரச் செய்யாது.
சுருக்கமாகச் சொன்னால்,பிரம்படி தண்டனை என்பது மாணவர்களிடம் ஒழுக்கத்தை விதிப்பதற்கான மிகக் குற்றவுணர்வற்ற, ஜனநாயகமற்ற வழி ஆகும். மாணவர்கள் சிறார்கள் குறும்புத்தனம் அவர்களது வளர்ச்சியின் ஒரு இயல்பான பகுதியாகும். அதற்கு “மிருகத்தனமான" பிரம்படி தண்டனையை விதிப்பது முறையல்ல.
அன்வார் தனது கருத்தை தனிப்பட்ட அபிப்பிராயமாகச் சொன்னதாகக் கூறியிருக்கலாம். ஆனால் நாட்டின் பிரதமர் இத்தகைய கருத்தை வெளிப்படுத்தும்போது, அது தனிப்பட்டதாக இருந்தாலும் கூட, அது மெதுவாக பொதுக் கொள்கை விவாதங்களில் ஊடுருவும் வாய்ப்பு உள்ளது.நாட்டில் பள்ளி ஒழுங்கு மீறல் பிரச்சினைகள் விவாதிக்கப்படும் நேரத்தில், அன்வார் இத்தகைய கருத்தைச் சொல்லுவது நேரத்திற்குப் பொருந்தாததும் அவசரமுடிவுமாகும்.
அன்வார் தன் பள்ளிக்காலத்தில் தண்டனை பெற்றதாகவும், ஆசிரியராக இருந்தபோது சில மாணவர்களை பிரம்பால் அடித்ததாகவும் ஒப்புக்கொண்டு உள்ளார்.ஆனால் ஒழுக்கத்திற்கான தண்டனைகள் எல்லா காலத்திலும் சமூகச் சூழலிலும் உகந்தவை அல்ல. அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் காலப்போக்கில் தண்டனைகளின் பொருத்தத்தை மாற்றுகின்றன.
மாணவர்களின் ஒழுக்க பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உளவியல் அணுகுமுறை உடல் தண்டனையை விட மிகச் சிறந்தது என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது
எனவே, நான் அன்வாரை அவரது தனிப்பட்ட கருத்தைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்துகிறேன். ஏனெனில் அது சிலரின் சொந்த நலன்களுக்கு வழி காட்டுவதாகக் கருதப்படலாம். இவ்வாறு பேராசிரியர் இராமசாமி தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



