இன்று இந்தியாவின் ஸ்பேடெக்ஸ் விண்கலன்களை ஒருங்கிணைக்க திட்டம்-இஸ்ரோ!

- Muthu Kumar
- 10 Jan, 2025
ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் இன்று வெள்ளிக்கிழமை (ஜன.10) தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.விண்வெளியில் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் அமைக்கும் முன்னோட்ட முயற்சியாக ஸ்பேடெக்ஸ் எனும் ஆய்வுத் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தியுள்ளது.
இதற்காக வடிவமைக்கப்பட்ட ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிச.30-ஆம் தேதி விண்ணில் செலுத்தி புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன. தற்போது இவ்விரு விண்கலன்களும் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தொலைவு இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வருகின்றன.
இவற்றின் தொலைவை 225 மீட்டராக குறைக்க கடந்த புதன்கிழமை முயற்சி செய்யப்பட்டது. அப்போது புறச்சூழல் காரணமாக விண்கலன்களின் இயக்க வேகம் எதிா்பாா்த்ததைவிட குறைந்துவிட்டது. இதனால் திட்டமிடப்பட்டிருந்த விண்கலன்கள் ஒருங்கிணைப்பு நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களின் ஒருங்கிணைப்பு செயல்பாடுகள் இன்று வெள்ளிக்கிழமை (ஜன.10) தொடங்கும் என எதிா்பாா்ப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், இரு விண்கலன்களை ஒருங்கிணைப்பதற்கு தடையாக இருந்த புறச்சூழல் காரணிகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. இரு விண்கலன்களையும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *