ஹரிராயாவை முன்னிட்டு நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- Surendran Sumdraraj
- 20 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 20-
ஹரிராயா பெருநாளை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்வதால், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இன்றிரவு வரை அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
PLUS மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தின் மேலாளர் முகமட் யூசுப் அப்துல் அசீஸ் தெரிவித்ததாவது, நேற்று பதிவான வாகன எண்ணிக்கை முந்தைய நாளைவிட சிறிதளவு குறைந்திருந்தாலும், தினசரி இரண்டு மில்லியனைத் தாண்டி இருந்ததாகக் கூறினார்.
“நாளை ஹரிராயா கொண்டாடப்படுவதால், இன்றும் இரவு நேரம் வரை இதே போக்குவரத்து நிலை தொடரும் என PLUS கணிக்கிறது,” என்று அவர் இன்று தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்து நிலையைப் பாதிக்கும் வகையில் எந்தவித எதிர்பாராத விபத்துகளும் நேற்று வரை பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார். இதனால், போக்குவரத்து ஓட்டம் சீராக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக பயணிக்கவும், சாலைவிதிகளைக் கடைப்பிடிக்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக நீண்ட பயணங்களுக்கு முன் வாகனங்களைச் சரிபார்த்துக் கொள்ளவும், ஓய்வு எடுத்து பயணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹரிராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் நகரங்களுக்கு வெளியே செல்லும் நிலை தொடர்ந்து காணப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



