அராகுடா பெனாந்தி ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் சோட்டானிக்கரை பகவதி அலங்காரத்தில் மகாதிருக்காட்சி!
- Surendran Sumdraraj
- 17 Apr, 2026
தி.கிரிஷன்
வரலாற்றுச் சிறப்புமிக்க அரா குடா பெனாந்தி தோட்ட அருள்மிகு ஸ்ரீ மஹா முத்து மாரியம்மன் ஆலயத்தின் 140-ஆவது ஆண்டு தீமிதி திருவிழாவின் உபயங்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இதன் ஒரு அங்கமாக, கடந்த 15/4/2026 புதன்கிழமை எட்டாம் நாளன்று உபய விழா பக்திப் பெருக்குடன் கொண்டாடப்பட்டது.
இந்த எட்டாம் நாள் விழாவின் சிறப்பம்சமாக,
விஷு புத்தாண்டினை முன்னிட்டு அன்னை முத்து மாரியம்மன் "சோட்டானிக்கரை பகவதி" அலங்காரத்தில் நேற்று காட்சியளித்தார்.
மலையாள மொழி பேசும் மக்களின் அறுவடைத் திருநாளாகவும், புத்தாண்டு தினமாகவும் போற்றப்படுவது 'விஷு'. இந்நாளில் நன்மைகள் பெருகவும், செல்வம் கொழிக்கவும் இறைவனை வழிபடுவது வழக்கமாக உள்ளது. கேரள
மாநிலத்தின் மிகவும் சக்திவாய்ந்த குலதெய்வமாக சோட்டானிக்கரை பகவதி போற்றப்படுகிறாள்.
அன்னை அங்கே காலையில் சரஸ்வதியாகவும், மதியம் லக்ஷ்மியாகவும், மாலையில் துர்க்கையாகவும் (காளியாகவும்) ஆராதிக்கப்படுகிறாள்.
இந்த சுபதினத்தில், மலையாளி மக்களின் வழிபாட்டு முறையைப் போற்றும் வகையில், பெனாந்தி முத்து மாரியம்மன் சோட்டானிக்கரை பகவதியாக அலங்கரிக்கப்பட்டார்.
தீய சக்திகளை அழித்து பக்தர்களைக் காக்கும் காளி சொரூபமாக அம்பாள் காட்சியளித்தது
மெய்சிலிர்க்க வைத்தது.
எஸ். எஸ். மூன் அவர்களின் உபயத்தில் இந்த வைபவம் சீரோடும் சிறப்போடும் நடைபெற்றது.
இந்த பிரம்மாண்டமான 140-ஆவது ஆண்டு விழாவினை மிக நேர்த்தியாகவும், ஆகம விதிகளின்படியும் வழிநடத்தி வருகிறார் ஆலய ஒருங்கிணைப்பாளர் டத்தோ பாலநம்பியார் மற்றும் அவர் தம் செயலவை உறுப்பினர்கள்.
அன்னையின் மீதான தீராத பக்தியினால், இரவு பகல் பாராது உழைத்து, இந்த விழாவினைச் சீராக ஒருங்கிணைத்த அவரது தொண்டு பாராட்டுதலுக்குரியது.
அவரது தலைமையிலான நிர்வாகக்
குழுவின் உழைப்பால் விழா களைகட்டியுள்ளது.
இத்திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வாக, நேற்று விநாயகர் பெருமானுக்கு மிகச் சிறப்பான முறையில் வெள்ளி கவசம் சாற்றப்பட்டது. முழுமுதற் கடவுளான கணபதி பெருமான், தும்பிக்கைமுதல் திருவடி வரை ஜொலிக்கும் வெள்ளி அங்கிகளால் அலங்கரிக்கப்பட்டு, ‘வெள்ளிச் சாத்துப்படி’ கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
தீமிதி திருவிழா எவ்வித இடையூறுமின்றி இனிதே நடைபெறவும், பக்தர்களின்வாழ்வில் உள்ள தடைகள் நீங்கவும் வேண்டி இந்த விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.
வைரவைடூரியங்கள் பதிக்கப்பட்டதைப் போன்ற ஒளியுடன், வெள்ளிப்பிரபையில் ஜொலித்த விநாயகப் பெருமானின் இந்தத் திருக்காட்சி, அங்கு வந்திருந்த பக்தர்களின் கண்களுக்கும் மனதிற்கும் மிகுந்த குளிர்ச்சியையும் பரவசத்தையும் தந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



