பெரிக்காத்தானில் இணைந்தாலும் இந்தியர்களின் வாக்குகள் கிடைக்க மஇகாவுக்கு உத்தரவாதம் ஏதுமில்லை!
- Muthu Kumar
- 22 Sep, 2025
கோலாலம்பூர், செப். 22 -
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இணைந்தால், இந்தியர்களின் வாக்குகள் அல்லது ஆதரவு நிச்சயமாகக் கிடைக்கும் என்பதற்கு எந்த ஓர் உத்தரவாதமும் இல்லை என்பதால், மஇகா தொடர்ந்து தேசிய முன்னணியிலேயே நீடித்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரிக்காத்தான் நேஷனல் இன்னமும் மலாய் இஸ்லாம் செயல்பாடுகளிலேயே மூழ்கி இருக்கின்ற காரணத்தினால், மலாய்க்காரர் அல்லாத மக்கள் குறிப்பாக வாக்காளர்கள் பெரிக்காத்தான் நேஷனல் மீது நம்பிக்கை வைத்திருக்காத உண்மையை மஇகா அவசியம் உணர்ந்திருக்க வேண்டும் என்று, மலேசிய தொழில்நுபப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் மஸ்லான் அலி குறிப்பிட்டுள்ளார்.
"இந்நிலையில் தொடர்ந்து தேசிய முன்னணியிலேயே நீடிப்பதா அல்லது பெரிக்காத்தான் நேஷனலில் இணைவதா என்பது பற்றி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வர முடியாத சூழலில் மஇகா தலைமைத்துவம் தற்போது இருப்பதாக நான் நினைக்கின்றேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
"பல மஇகா உறுப்பினர்களும் இதை உணர்ந்திருக்கின்றனர். தேசிய முன்னணியிலேயே தொடர்ந்து இருப்பதென்று அவர்கள் முடிவு செய்யவும் கூடும்" என்று, எஃப்எம்டியிடம் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
மஇகா தொடர்ந்து தேசிய முன்னணியிலேயே நீடித்து வருவதா அல்லது பெரிக்காத்தானில் சேருமாறு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்றுக் கொள்வதா என்பது குறித்த ஒரு முடிவு, வரும் நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் கட்சியின் பொதுப் பேரவையில் எடுக்கப்படும் என்று மஇகா தரப்பிலிருந்து அண்மைய காலமாக கூறப்பட்டு வருகிறது.
மஇகா இணையக் கூடிய சாத்தியத்தை அண்மையில் மறுத்திராத கட்சித் தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், எனினும், அது குறித்து இப்போதைக்கு முடிவு செய்ய இயலாது என்று கூறியிருந்தார். இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து பேசிய மஸ்லான், தேசிய முன்னணியில் இருந்து வெளியேறியே தீர்வது என்று மஇகா முடிவு செய்யுமேயானால், அது ஓர் அசாதாரண
முடிவாகவே கருதப்படும் என்றார்.
தேசிய முன்னணியில் மஇகா மிக நீண்ட காலமாக ஓர் உறுப்புக் கட்சியாக இருந்து வரும் வேளையில், அதிலிருந்து வெளியேறுவது என்ற செய்திகளானவை, அதன் தலைமைத்துவத்தில் “கயிறு இழுத்தல்" போக்கு நடந்து வருவதாக தாம் கருதுவதாகவும் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
"நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகாவிற்கு உரிய பங்கு கிடைக்காததால் அதன் தலைமைத்துவம் ஏமாற்றம் அடைந்திருப்பதை நான் காண்கிறேன் என்றும் மஸ்லான் கூறியுள்ளார்.
இதனிடையே, பெரிக்காக்கான் கேஷளலில் இணைந்தால், மலாய்க்காரர் அல்லாத குறிப்பாக இந்திய வாக்காளர்களின் ஆதரவைக் கவருவதில் சிரமம் நிலவும் என்ற காரணத்தினால், தேசிய முன்னணியிலேயே மஇகா அவசியம் தொடர்ந்து நீடித்திருக்க வேண்டும் என்று. நுசாந்தாரா கல்விக் கழகத்தைச் சேர்ந்த அஸ்மி ஹசான் இதற்கு முன்னர் பொதுத் தேர்தல்களில் அம்னோ உதவியது போன்று, பெர்சத்துவும் பாஸும் தங்களுக்கு உதவும் என்று மஇகா எதிர்பார்க்கவும் முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
“ஒரு வலிமையான கூட்டணி இன்றி, பெரிக்காத்தானில் மஇகா ஒரு பலவீனமான கட்சியாக ஆகிவிடும். மஇகாவைத் தவிர்த்து, வேறு சில கட்சிகளை நம்பலாம் என்பதை இந்திய சமூகம் அறிந்திருக்கிறது.“பாஸ் கட்சியின் கருத்துக்கள், மிகவும் தீவிரமானதாகக் கருதப்படுகின்றன. இது இந்திய சமூகத்தை பெரிக்காத்தான் நேஷனலுக்கு வாக்களிப்பதில் இருந்து மேலும் தூர விலக்கி வைத்தும் விடும்" என்று அஸ்மி கூறியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



